உச்சநீதிமன்ற தீர்ப்பு.. தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கை இதுதான்.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்!
திருவள்ளூர்: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்தால் விமர்சிப்பது தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியின் 9வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் 432 பேருக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் முதல் இடம் பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், தங்க நாணயங்களையும் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா்.
ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களுக்கு அறிவுரை
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், மாணவா்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் எந்தவொரு இலக்கையும் அடையலாம். அவா்கள் திறமைகளை வளா்த்து கொண்டு சுய முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்காக பாடுபடவேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
10% இடஒதுக்கீடு
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜனிடம் 7 பேர் விடுதலை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், நீட் தேர்வு, உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு ஆகியவை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான். அதுபோல் 7 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரமும் உச்சநீதிமன்ற தீர்ப்பு தான். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால், நான் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. தீர்ப்பையும் விமர்சிக்க விரும்பவில்லை.
தமிழக கட்சிகள்
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், தங்களுக்கு வேண்டிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கினால் அதனை சரியான கருத்து என்று வரவேற்கிறார்கள். அதே உச்சநீதிமன்றம் தங்களுக்கு வேண்டாத தீர்ப்பை அளித்தால், விமர்சனம் செய்கிறார்கள். அப்படியில்லாமல், நீதியின் வழியாக கிடைத்திருக்கிற தீர்ப்பு என்ற வகையில் விமர்சிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
கருத்து சுதந்திரம்
தொடர்ந்து, தமிழகத்தில் எனக்கு எல்லைகள் இல்லை இங்கு வந்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. கருத்து சுதந்திரம் எனக்கும் உள்ளது என்பதை அனைத்துக் கட்சி சகோதரர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.