கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை.. டிசி வாங்கி சொந்த ஊருக்கே திரும்பிய 23 மாணவிகள்! எதிர்காலம் என்ன?
திருவள்ளூர்: கீழச்சேரியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், சுமார் 23 சக மாணவிகள் டிசி வாங்கி கிளம்பியுள்ளனற்.
சமீப காலமாகவே தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில், கடந்த மாதம் திருவள்ளூர் கீழச்சேரியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர்
திருவள்ளூர் கீழச்சேரியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜூலை 25ஆம் தேதி அந்த மாணவி விடுதியிலிருந்து பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து கொண்டு தயாராகி உள்ளார். அந்தச் சமயம் தோழிகளுடன் சென்று உணவு அருந்திவிட்டுச் சென்ற மாணவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை
விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்த மாணவியின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தை மாணவியின் பெற்றோர்கள் கடுமையாகச் சாடி உள்ளனர். மாணவி உயிரிழந்ததைத் தாமதமாகத் தெரிவித்ததாகவும் அதுவும் கூட உயிரிழந்ததை மறைத்துவிட்டு உடல்நிலை சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று மட்டுமே கூறியதாகப் புகார் அளித்துள்ளனர்.

23 மாணவிகள்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அந்த தனியார்ப் பள்ளி மூடப்பட்டது. மாணவி உயிரிழந்த வழக்கை இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுமார் 15 நாட்களுக்குப் பின்னர், அந்தப் பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது விடுதியில் தங்கிப் படித்த சுமார் 23 மாணவிகள் மாற்றுச்சான்றிதழைப் பெற்றுச் சென்று சொந்த ஊருக்கே தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர்
பெற்றோரின் சம்மதத்துடனேயே மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வித் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த மாணவிகள் சொந்த ஊர்களில் பள்ளிகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் மாணவிகளுக்குக் கல்வி கிடைக்காமல் போகலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications