அதிமுக அயோக்கியர்களின் கூடாரம்! பன்னீரை சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை -டிடிவி தினகரன்
திருவள்ளூர்: அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாக அழைத்து சந்திக்க வேண்டிய தேவை ஒன்றும் தனக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

அமமுக கூட்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி செயல்பாடுகளில் பிடிப்பின்றி காணப்பட்ட டிடிவி தினகரன் இப்போது தீயாய் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். நாளை மறுநாள் சென்னையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ள அவர் மாவட்ட வாரியாகவும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நடைபெற்ற அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தினகரன் கலந்துகொண்டார்.

அழிப்பாதை
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாக அழைத்து சந்திக்க வேண்டிய தேவை தனக்கில்லை எனவும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை அமமுக தொண்டர்கள் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக தெரிவித்த அவர் அதிமுக அழிப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டதாக கவலை தெரிவித்தார்.

அம்மா ஆட்சி
அம்மாவுடைய ஆட்சியை அமைத்து அம்மாவுடைய இயக்கத்தை மீட்டெடுப்போம் என உறுதி கூறிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்கும் தனது முயற்சி தொடரும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். இதனிடையே தினகரனுக்கு திருவள்ளூர் மாவட்ட அமமுக நிர்வாகிகளால் வேலும், வீரவாளும் பரிசாக அளிக்கப்பட்டது. தினகரன் நேற்று சென்ற நிலையில் நேற்று முன் தினம் சசிகலா திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

வரிசையாக
தமிழகம் முழுவதும் சசிகலா புரட்சிப் பயணம் செல்லவிருக்கும் நிலையில், அவரைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் சூறாவளி சுற்றுப்பயணம் செல்வதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார். நாளை மறுநாள் அமமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேசி தினகரன் சில முக்கிய முடிவுகளை எடுப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications