கீழச்சேரி பள்ளி மாணவி மரணம்.. உரிமை மீறல் நடந்துள்ளது! தேசிய குழந்தை ஆணையத்தலைவர் பரபரப்பு!
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம் கீழச்சேரியில் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், குழந்தைகள் உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருத்தணியை அடுத்த தெக்கலூர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 25ம் தேதி கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவி உயிரிழந்த விடுதியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவர்களுடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான், அம்மாவட்ட எஸ்.பி. கல்யாண் ஆகியோரும் உள்ளனர். மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் விடுதியின் அறையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பள்ளி நிர்வாகி. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டன் மற்றும் சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பள்ளியில் விசாரணை நிறைவடைந்த பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக விருந்தினர் மாளிகையில் மணவியின் தாயார் முருகம்மாள். அண்ணன் சரவணன் அண்ணி, சித்தி குட்டியம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் பிரியங்க் கனுங்கோ செய்தியாளர்களிடம் பேசியவதாவது: மாணவியின் மரணம் குறித்து இன்று காலை பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் சக மாணவிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. இது சம்பந்தமாக, ஏற்கனவே விசாரணை செய்த மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு ஆகியோரிடமும் மாணவியின் மரணம் சம்பந்தமான தகவல்களை சேகரித்துள்ளோம்.
மாணவியின் உறவினர்களிடமும் மரணம் சம்பந்தமான சந்தேகங்களையும் கேட்டறிந்தோம். விடுதியில் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் பிரியங்க் கனுங்கோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications