தெள்ளாறு அருகே 1300 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள்.. மரபுசார் அமைப்பின் ஆய்வில் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: மரபுசார் அமைப்பின் சமீபத்திய கள ஆய்வின் பொழுது தெள்ளாறு என்ற பகுதியில் அமைந்துள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான பல அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் சார்பில் அந்த அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா சரவணன் ஆகியோர் தெள்ளாறு பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அப்போது மாம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் இருந்த மாமரத்தின் அடியில் சதுர ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும் அதனருகே இரண்டு பலகை சிற்பங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதனை ஆய்வு செய்தபொழுது அச்சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் மற்றும் பிள்ளையார் சிற்பம் என்பது கண்டறியப்பட்டது.

லகுலீசர்
சைவப்பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தைத் தோற்றுவித்தவர் லகுலீசர். இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள காயரோஹனகத்தில் லகுலீசரால் தோற்றுவிக்கப்பட்ட பாசுபதம் தனது சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. கி.பி 3ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழக நிலப்பரப்பில் இப்பாசுபதம் வளர்ச்சியுற்று பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்று இருந்தது. இதுவரை சுமார் முப்பதுக்கும் குறைவான லகுலீசர் சிற்பங்களே தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது .

சிற்பம்
சுமார் மூன்றடி உயரமும் , மூன்றடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்பு சிற்பமாக லகுலீசர் வடிக்கப்பட்டுள்ளார். இவரின் தலையை முடிச்சுடன் கூடிய அழகான ஜடாபாரம் அலங்கரிக்க , இரு செவிகளிலும் பத்ர குண்டலமும் , பெரிய விழிகளும் தடித்த உதட்டும் கொண்டு நீள்வட்ட முகம் லேசாகச் சாய்த்தவாறு அமைந்துள்ளது. இவரின் வலது கையில் தனது ஆயுதமான தடி போன்ற லாங்குலத்தை கடக முத்திரையில் தாங்கி நிற்க, இடது கையை கடி முத்திரையில் இடையின் மீது வைத்துள்ளார். லாங்குலத்தின் அடிப்பகுதி மெல்லியதாகவும் , அதன் மேல்பகுதி பருமனாகவும் காட்சி தருகிறது. வழக்கமாகத் தண்டத்துடனோ இல்லை தனியாகவோ காட்சிப்படுத்தப்படும் நாகம் இச்சிலையில் காணப்படவில்லை. கழுத்தில் அணிகலனாக சரபளியும் , வயிற்றில் உதரபந்தமும் கொண்டு இடை ஆடையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இச்சிற்ப அமைதியை வைத்து இது ஏழாம் நூற்றாண்டின் கடைபகுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

பிள்ளையார்
அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலை மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்டு உள்ளது.. கற்பலகையில் நான்கு கரங்களுடன் பிள்ளையார் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கத் தனது மேல் வலது கரத்தில் நெற்பயிரையும் , மேல் இடது கரத்தில் அக்கமாலையுடன் , கீழ் வலது மற்றும் இடது கரத்தை தன் தொடையின் மீது வைத்தவாறு இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். யானையின் காது போன்றே பெரிய காது மடல்களுடன் கூடிய பருத்த முகத்திலிருந்து கீழ் நோக்கி இடப் பக்கம் சுருளும் துதிக்கையுடன் இடம்புரி பிள்ளையாராகக் கம்பீரத்துடன் காட்சி தருகிறார். மேலும் தும்பிக்கையின் வலப்பக்கம் கூறிய தந்தமும் , இடப்பக்கம் சிறிய தந்தமும் , தோளின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் சரியும் பட்டையான முப்புரி நூலும் , இருகைகளிலும் தோள்வளையும் , இடையில் உதரபந்தமும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறார்.

சிற்பம்
வளமையின் குறியீடாகச் சொல்லப்படும் நெற்பயிரை ஆயுதமாகக் கொண்டு இதுவரை வெகு சில பிள்ளையார்களே கண்டறியப்பட்டுள்ளது. இதன் சிற்ப அமைதியைக் கொண்டு இதன் காலமும் மேலே குறிப்பிட்ட லகுலீசரின் காலமே ஆகும். இதுவரை லகுலீசர் கண்டறியப்பட்ட இடங்களில் பெரும்பாலும் இதே போன்று பிள்ளையாரும் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது. இவ்விறு சிற்பங்களுடன் இரண்டடி சதுர ஆவுடையுடன் இதே காலத்தைச் சேர்ந்த ஒரு சிவலிங்கமும் காணக்கிடைக்கிறது.

எந்த காலம்
இம்மூன்று சிற்பங்களையும் வைத்துப் பார்க்கையில் இவ்விடத்தில் 7 ம் நூற்றாண்டுவாக்கில் பல்லவர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. கால ஓட்டத்தில் கோயில் அழிந்து இம்மூன்று சிற்பங்கள் மட்டும் காலத்தின் சாட்சியாக எஞ்சி நின்று நமக்கு இவ்விடத்தின் தொன்மையை உணர்த்துகிறது. இந்த தொன்மை வாய்ந்த அரிய சிற்பங்களை மக்கள் முறையாகப் பாதுகாத்து, பொதுமக்கள் வழிபாடு செய்ய ஏதுவாக ஏற்பாடு வேண்டும் என திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications