2 ஏழைக் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்த்துவிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்
திருவண்ணாமலை: தனக்கு உள்ள இடஒதுக்கீட்டினை பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2 ஏழைச் சிறுவர்களை சேர்த்து விட்டு இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
திருவண்ணாமலை அருகே கணந்தம்பூண்டி கிராமத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சாதாரண ஏழை, எளியவர்களின் பிள்ளைகள் சேருவது சாத்தியம் இல்லை.

இந்த பள்ளியில் சேர வேண்டுமென்றால் மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் மற்றும் எம்பி மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை உள்ளவர்களே சேர்க்கப்படுவார்கள்.
இந்நிலையில் போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - எல்லம்மாள் தம்பதி பழைய இரும்பு, மற்றும் பேப்பர்களை பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த தம்பதியினரின் மகள் மகள் வனிதா (6), மற்றும் போளூரை அடுத்த எட்டிவாடி கிராமத்தில் பெற்றோர் இறந்ததால் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்து மீட்கப்பட்ட சரவணன் (6) ஆகியோரை தனது ஒதுக்கீட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சேர்த்துவிட்டார்.
மேலும், 2 குழந்தைகளும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான கல்விக் கட்டணங்களையும் தனது மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து செலுத்துவதற்கான ஆணையையும் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் அவர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications