திருவள்ளுவர் சிலைக்கு “விபூதி”.. பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் குங்குமம் வைத்ததால் பரபரப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், திருவள்ளுவர் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னணி கட்சிகள் திருவண்ணாமலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நிலையில் அமைச்சர்கள் களமிறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தனூர், கொளமஞ்சனூர், தானிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அஸ்வத்தாமன், சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமப் பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாரத் மாத கி ஜெ என பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஏற்கனவே திருவள்ளுவருக்கு பாஜகவினர் மத அடையாளம் பூசுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications