திமுக இந்துக்களுக்கு எதிரியல்ல.. விமர்சனங்கள் அனைத்துக்கும் திருவண்ணாமலையில் ஸ்டாலின் கொடுத்த பதில்
திருவண்ணாமலை: திமுகவை இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்பவருக்கு திருவண்ணாமலையில் நின்றபடி பதிலடி கொடுத்துள்ளார் அந்த கட்சி தலைவர் ஸ்டாலின்.
தனது ஆட்சி, இந்துக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்குமான, ஆட்சியாக இருக்கும் என்று உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும் இந்த முறை திமுகவே போட்டியிடுகிறது. திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் களம் காண்கிறார் எ.வ.வேலு.

திருவண்ணாமலை பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திமுக வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து, திறந்த வேனில் நின்றபடி திருவண்ணாமலை நகரில் இன்று வாக்கு சேகரித்தார் ஸ்டாலின். அப்போது அவர் பேசியதை பாருங்கள்: 1989ம் ஆண்டு, திருவண்ணாமலை என்ற பெயரில் தனி மாவட்டத்தை உருவாக்கிய கருணாநிதியின் மகன் நான் உங்களை தேடி வந்துள்ளேன். திருவண்ணாமலை ஒரு ஆன்மிக மண்.

தமிழில் அர்ச்சனை
திமுக தேர்தல் அறிக்கையில் ஆலயங்கள் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளோம். மலை கோவில்களில் கேபிள் கார் வசதி செய்யப்படும், அனைத்து கோவில் குளங்களும் தூர்வாரப்படும், கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும். கோவில் நிர்வாகம் சிறப்பாக செயல்பட உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்படும், கோவிலில் பணியாற்றும் பகுதிநேர தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி முடித்த 25 பேருக்கு பணி நியமனம் செய்யப்படும். ஆன்மீக சுற்றுலா செல்வோருக்கு நிதி வழங்கப்படும்.

பூசாரிகளுக்கு ஊதியம்
புனித நகரங்களில் சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும், பூசாரிகள் நலவாரியத்தில் இணைந்துள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் 2 ஆயிரம் வழங்கப்படும். 60 வயதில் ஓய்வு பெறும் பூசாரிகளுக்கு, ஓய்வூதியம் உயர்த்தப்படும். திருவண்ணாமலை கிரிவலப்பாதை காங்கிரீட் பாதையாக மாற்றப்பட்டு சாலையின் இருபுறமும் பசுமை சூழல் அமைக்கப்படும்.

ஆன்மீக பணிகளை செய்யப்போகிறோம்
இப்படி ஆன்மீக பணிகளை சிறப்பாக செய்ய காத்திருக்கும் ஆட்சிதான் எனது தலைமையில் அமைய உள்ள திமுக ஆட்சி. ஆனால், தேர்தல் வரும்போதெல்லாம் ஒரு பிரச்சாரத்தை செய்வார்கள். நாம் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்கிற சில தலைவர்கள் , சில கயவர்கள் இதுபோல ஒரு பிரச்சாரத்தை செய்வார்கள். என்ன விமர்சனம் செய்வார்கள் என்றால்.. திமுக இந்துக்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துகிறார்கள்.

எல்லோரையும் மதித்து ஆட்சி
யாருடைய நம்பிக்கைக்கும் எதிராக இருப்பது திமுக அல்ல. அமைய உள்ள எனது அரசு அனைவருக்கும் மதிப்பை கொடுக்கும், எல்லோரையும் மதித்துதான் எனது ஆட்சி நடக்கும் என்று திருவண்ணாமலை நின்று கொண்டு உறுதி அளிக்கிறேன். தமிழக மக்கள், அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்று தெளிவு கொண்டவர்கள். இதை பாஜக புரிந்துகொள்ள நூறு வருடம் ஆகும். ஏனென்றால், அவர்கள் எதையும் யோசிக்க மாட்டார்கள் , சிந்திக்க மாட்டார்கள்.

திமுக வேடிக்கை பார்க்காது
பாஜக தனது வேட்பாளர் பட்டியலை இந்தி மொழியில் வெளியிட்டது. இந்தி மொழி பேசக்கூடிய மக்களுக்கான ஆட்சிதான் பாஜக . இந்தியை தமிழகத்தில் திணிப்பது இந்தி பேசும் இளைஞர்களை தமிழக வேலைவாய்ப்புகளில் நிரப்புவது, அதன்மூலம் பாஜக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எடப்பாடி பழனிச்சாமி வேடிக்கை பார்க்கலாம். ஆனால், திமுக அல்லது தமிழக மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

ஹிந்திக்கு எதிரியல்ல
தனிப்பட்ட எந்த மொழிக்கும் நாம் எதிரி கிடையாது. ஹிந்தி மொழிக்கு திமுக எதிரி கிடையாது. ஹிந்தியை திணிக்க கூடாது என்பது தான் திமுகவின் கோரிக்கை. வட மாநில மக்களை நாங்கள் மறுக்கவில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்குத் தான் தரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறி கொண்டு இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் கூட்டம் கூட்டமாக போய் தமிழர்கள் வேலை பார்க்க முடியுமா, முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த மாநிலங்களில் உள்ள மக்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள் . அதேமாதிரி தமிழகத்தில் இருக்கக்கூடாதா. இவ்வாறு திருவண்ணாமலையில் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். இதனிடையே ஸ்டாலின் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே நேரம், இன்னொரு பக்கம் வருமான வரித்துறையினர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications