மனைவியை எட்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்த கணவன்.. பதறிய திருவண்ணாமலை
திருவண்ணாமலை: காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆசை மனைவியை குடும்பத் தகராறு காரணமாக எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வைத்து கணவன் காட்டுப் பகுதியில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கோபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றை ஓட்டி வருகிறார். திருவண்ணாமலை கவரிங் கடையில் பணியாற்றி வந்த சரண்யா என்பவரும், கோபியும் காதலித்துள்ளனர்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கோபி – சரண்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். காதல் திருமணமாக இருந்தாலும், கணவன் மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சமீபகாலமாக மோதல் முற்றியுள்ளது.
இதனால் சரண்யா அம்மா காவேரி வாரம் ஒரு முறை அவர்களின் வீட்டுக்கு சென்று தன் மகள் மற்றும் பேரக் குழந்தைகளை சந்தித்து வந்தார். ஒவ்வொருமுறை சண்டை வரும்போதும், காவேரி கோபி மற்றும் சரண்யாவை சமாதானப்படுத்தி வந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற தீபாவளி பண்டிகையின்போது, கணவன் – மனைவி இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் தேதி காவேரி தொடர்ந்து தன் மகள் சரண்யாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் சரண்யா அழைப்பை எடுக்கவில்லை. ஒருகட்டத்தில் அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது.
இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி காவேரி அவரின் வீட்டுக்கே சென்று பார்த்துள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் கேட்டபோது, அவர்கள் சரண்யாவை பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் கோபியிடம் கேட்டதற்கு, உங்கள் மகள் என்னிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி இரண்டு நாட்கள் ஆகிறது என்று கூறியிருக்கிறார்.
உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் தேடியும் சரண்யா கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த காவேரி இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கோபியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரின் நடவடிக்கையையும் காவல்துறை கண்காணித்துள்ளது. அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் காவல்துறை விசாரணையிலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தன் மனைவியைக் கொலை செய்ததை கோபி ஒப்புக்கொண்டார். காவல்துறையிடம் கோபி அளித்த வாக்குமூலத்தில், எனக்கு இது இரண்டாவது திருமணம். முதல் மனைவியை பிரிந்துவிட்டேன்.
எனக்கும், என் சரண்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அவள் உடலை அடைக்க சூட்கேஸ் வாங்கினேன். சண்டையிட்டபோது அவளை ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தேன். பிறகு உடலை தலை, மார்பு, தொடை உள்பட 8 பாகங்களாக வெட்டி சூட்கேஸில் அடைத்தேன்.
பிறகு அதை கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் வீசினேன் என்று கூறினார். அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி சென்ற காவல்துறை சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications