திருவண்ணாமலை அருகே நேற்று இரவு மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 3.0 ஆக பதிவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.0 அலகுகளாக பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பகலில் நமது நாட்டின் பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகி இருந்தது.
இதனிடையே நேற்று இரவு 8.41 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நிலத்துக்கு அடியில் 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் இது. கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை உருக்குலைய செய்தது. அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications