தி.மலை, விழுப்புரம் மக்களே உஷார்! சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு.. வெள்ள அபாயம்
திருவண்ணாமலை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இரு மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

- சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு - 119 அடி
- தற்போதைய நீர் மட்டம் - 113.40 அடி
- திறந்துவிடப்படும் நீரின் அளவு - 9,000 கனஅடி
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகி இருக்கிறது. இந்த பகுதியில் 16.48 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ, கரூர் மாவட்டம் எசனூர் பகுதியில் 15.4 செ.மீ, கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் 15 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகியிருக்கிறது. வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை என டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இன்று டெல்டாவில் மழை இல்லை. மாறாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்திருக்கிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுகு்க விடுமுறையும் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து, கனமழை காரணமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தேனியில் சில வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது. சேலம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications