கஞ்சாவால் வெறிப்பிடித்த இளைஞர்கள்.. தந்தை, மகன் மீது கொலைவெறி தாக்குதல்! திருவண்ணாமலையில் திக்திக்
திருவண்ணாமலை: சாலையில் வழிவிட சொன்னதற்காக தன்னுடைய தந்தை மற்றும் தம்பியின் தலையை கஞ்சா போதையில் இருந்த நபர்கள் கொடூரமாக தாக்கி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவலை பதிவிட்டு உள்ளார் எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம்.
திருவண்ணாமலையை சேர்ந்த அவர் இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "கஞ்சா போதையில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் இரும்பு ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் என் தந்தை மற்றும் தம்பி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்பாவுக்கு காது கிழிந்து தையல், தலையில் பலத்த காயம், தம்பிக்கு தலையிலும் முதுகிலும் காயம். உயிர் தப்பினால் போதுமென சமாளித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடி வந்திருக்கின்றனர்.

வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்த ஐந்து நபர்களை வழிவிடச் சொன்னதற்கு இரும்பு பைப் கொண்டு தாக்கி என் அப்பா உயிர் தப்பினால் போதுமென்கிற நிலைக்கு ஆளாகி காதில் வழிந்த ரத்தம் நிற்காமல் வெளியேறியதால் அவரை விரைவாக சுகஸ்தலா மருத்துவமனையில் சேர்த்தோம், தம்பியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர்.
அப்பாவிற்கு தலை மற்றும் காதில் பதினான்கு தையல், என் தம்பிக்கு தலையில் என்ன பாதிப்பு இருக்கிறது என இன்று தான் சொல்ல முடியுமென சொல்லி இருக்கிறார்கள். இந்த வன்முறையை செய்த எவரும் நாங்கள் வசிக்கும் தெருவிலோ அல்லது அருகாமை தெருவிலோ வசிக்கவில்லை. ஆனால் தினமும் அவர்களின் நடமாட்டம் இருக்கிறது. தியாகி அண்ணாமலைப் பள்ளி தான் அவர்களின் இரவு வாழ்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. காவல்துறையில் புகாரளித்து நேற்றிரவே விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.

இது நாங்கள் வசிக்கும் திருவண்ணாமலை, புதுவானியங்குளம் முதல் தெருவில் நடந்தது, தொடர்ச்சியாக கஞ்சாவுக்கு எதிராக குரல் கொடுத்தும் இது குறைந்தபாடில்லை, அதே தெருவில இருக்கும் தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளி கஞ்சா மற்றும் பல்வேறு போதைப் பொருட்கள் பயன்படுத்தும் நபர்கள் இரவு முழுவதும் சுவரேறி உள்ளே வெறியாட்டம் போடுவது தெரு மக்களுக்குப் பல்வேறு இன்னல்களை உருவாக்குகின்றனர்.
கஞ்சா போதையில் உள்ள நபர்களை எந்த வகையிலும் கையாள முடியாமல் நாங்கள் திணறிக் கொண்டிருக்கிறோம். இதை தனிப்பட்ட பிரச்சனையாக கையாளாமல் சமூக பிரச்சனையாகவே பார்க்கிறேன், போலீஸ் மற்றும் பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. குறிப்பாக தெருவில் உள்ள பெண்கள் இந்தப் பிரச்சனைக்கு முழுவதுமாக துணை நிற்பதாகவும் நம்பிக்கை அளிக்கின்றனர். இந்த கஞ்சா ஒழுப்புக்கான அறவழி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன். நண்பர்கள், பொதுமக்கள், ஊடகத்தின் ஆதரவு வேண்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications