பாறையின் அடியில் சிக்கிய சிறுமி; ஒரே அறையில் 3 உடல்கள்..! கண்கலங்கிய NDRF கமாண்டர்
திருவண்ணாமலை: தன் வாழ்நாளில் திருவண்ணாமலை சம்பவம் மறக்க முடியாத ஒரு கொடூர நிகழ்வாக அமைந்துவிட்டது என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வீசிய ஃபெஞ்சல் புயல் மழைக் காரணமாக திருவண்ணாமலையில் வ.உ.சி. நகர் மலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகள் மீது கடுமையான மண் சரிவு ஏற்பட்டது. கிட்டத்தட்டச் சின்ன வயநாடுபோல் அந்தப் பகுதியே காட்சி அளித்து வருகிறது. முன்பே இரண்டு இடங்கள் மண் சரிவைச் சந்தித்த நிலையில், தென்கிழக்கு பகுதியில் சுமார் 1000 அடி மலை உச்சியிலிருந்து மூன்றாவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் வசித்து வந்த வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தின்போது சுமார் 40 டன் எடை உள்ள ராட்சதப் பாறை மலை உச்சியிலிருந்து உருண்டு வந்ததில், சுமார் 20 அடி சரிந்து உருவான மண் குவியலில் முழுமையாகப் பல வீடுகள் புதைந்துபோயின. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மண் சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் ஸ்ரீதர் அங்கே என்ன நடந்தது? மீட்புப் பணியின் போது இருந்த சவால்கள் என்ன? என்பது பற்றிய விரிவாகப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “காலை 5.30 மணிக்கு நாங்கள் மீட்புப் பணியைத் தொடங்கினோம். முதலில் நாங்கள் மண் சரிவு மட்டும்தான் என நினைத்திருந்தோம். ஆனால், தோண்டத் தோண்டத்தான் மிகப்பெரிய உருண்டையான பாறைகள் உள்ளே இருந்ததை அறிந்தோம். அந்தப் பாறைகளை மனித சக்தியைக் கொண்டு அகற்றவே முடியாது. அந்தளவுக்குப் பெரிதானவை.
அவற்றை ஜெசிபி வைத்துத்தான் எடுக்க முடியும். அங்கே உள்ளே ஜேசிபி எந்திரங்களைக் கொண்டுவரும் அளவுக்குப் பாதை வசதிகள் இல்லை. மிகக் குறுகலான சந்துக்குள் எந்திரத்தைக் கொண்டுபோக முடியாமல் தவித்தோம். உடனடியாக அங்கே இருந்த அங்கன்வாடி கட்டடத்தையும் மேலும் சில வீடுகளையும் உடைத்து ஜேசிபி உள்ளே வரும் அளவுக்கு வழியை உருவாக்கினோம்.
உள்ளே வந்த உடனேயே ஒரு வீட்டின் சமையலறை மற்றும் வரவேற்பு அறையையும் தோண்டினோம். அதற்குள் கவுதமன் என்பவரின் உடல் இருந்தது. அதை உடனடியாக மீட்டோம். அவர் பக்கத்திலேயே அவரது அம்மா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் சடலத்தை மீட்டோம். அதே பகுதியில் வீட்டின் வாசல் முன்பாக ஒரு பெண்ணின் உடல் புதைந்திருந்தது. அதையும் மீட்கப் பல கட்ட போராட்டம் நடத்தினோம். மிகப்பெரிய பாறை உருண்டு வந்ததில் அவரது கை அதன் கீழாகச் சிக்கிக் கொண்டிருந்தது. உடனடியாக அவரை வெளியே எடுக்க முடியவில்லை.

உடலைச் சிதையாமல் எடுக்க வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் போராடினோம். அதன் பின் எங்களால் வேலை செய்ய முடியவில்லை. தீயணைப்பு படை உட்பட எங்கள் வீரர்களும் உடல் சோர்விலிருந்தனர். மேலும் இருட்டாகி விட்டது. தற்காலிகமாக பணியை நிறுத்தினோம். அடுத்த நாள் காலை 6 மணிக்கு உடனடியாக பணியைத் தொடங்கினோம். அன்று இரண்டு வீடுகள் மீது இருந்த பாறைகளை அகற்றினோம். நல்ல வேளையாக உள்ளே எந்தச் சடலமும் கிடைக்கில்லை. உயிர்ச் சேதம் இல்லை என்பதை உறுதி செய்தோம்.
ஒருவேளை வீட்டை விட்டு வெளியேறும் போது யாரேனும் அடிப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகித்து வெளிப்புறம் தேடினோம். அங்கே ராஜ்குமார் என்பவர் சடலம் கிடைத்தது. அதேபோல் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடியில் ஒரு பெண்ணின் உடலும் கிடைத்தது. இந்தச் சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதிந்துவிட்டது" என்கிறார்.












Click it and Unblock the Notifications