திருவண்ணாமலை அருகே இதற்கு கூடவா லஞ்சம்.. ஆடிப்போக வைத்த அரசு ஊழியர்.. சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கினால் கண்டிப்பாக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அத்துடன் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும். ஜாமீனில் வெளியே வந்து பணியில் சேர்ந்தாலும், அந்த வழக்கால் ஓய்வு பெறும் முன்பு சிக்கல் வரும். இவ்ளவு சிக்கல் இருந்தாலும் லஞ்சம் வாங்குவது தொடர்கிறது. திருவண்ணாமலை அருகே ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் லஞ்சம் கேட்கும் அல்லது லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதற்காகவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது. இந்த துறைக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் டிஎஸ்பி தலைமையில் ஒரு அலுவலகம் இருக்கும். அங்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் பணியில் இருப்பார்கள். இவர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பற்றி ஆடியோ உடன் புகார் அளித்தால், அவர்களை கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அப்படி கையும் களவுமாக சிக்கி கைதாகும் அரசு ஊழியர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட வழக்கில் சிறை தண்டனை கிடைத்தால் கண்டிப்பாக மேல்முறையீடு செய்து வெளிவருவது கூட கடினமாகும். இப்படிப்பட்ட நிலையிலும் ஆங்காங்கே சிலர் லஞ்சம் வாங்கி கைதாகி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொழாவூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருடைய மனைவி ராணி. இவர், கடந்த 2023-ம் ஆண்டு இறந்துபோனார். இதையடுத்து நாராயணசாமி முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெற போளூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழாவூர் கிராம உதவியாளர் ராஜேந்திரன் செல்போன் மூலம் நாராயணசாமியை தொடர்பு கொண்டு தன்னை வந்து சந்திக்கும்படி கூறினாராம். இதன்படி கடந்த மாதம் 31-ந்தேதி நாராயணசாமி, ராஜேந்திரனை சந்தித்துள்ளார். அப்போது அவர், ரூ.1,500 லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெறும் உனது மனுவிற்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்வேன் என்று கூறினாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாராயணசாமி நேற்று திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுக்கும்படி நாராயணசாமியிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அதன்படி, அவர், அந்த பணத்தை கிராம உதவியாளர் ராஜேந்திரனிடம் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications