திருவண்ணாமலை மகாதீபம்.. 1,150 மீட்டர் தீபத்திரிக்கு சிறப்பு பூஜை! கோயிலுக்கு குவியும் பக்தர்கள்
திருவண்ணாமலை: வரும் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதற்குப் பயன்படும் 1,150 மீட்டர் திரிக்கு இன்று சிறப்புப் பூஜை நடைபெற்றது.
சிவனின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயம் போற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீப திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
இங்கு ஏற்றப்படும் பரணி தீபத்தை ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் அதிகம் அனுமதிக்கப்படவில்லை.
கார்த்திகை தீபம்
இப்போது கொரோனா பாதிப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தாண்டு வரும் டிச.6ஆம் தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி அருணாசலேஸ்வரர் கோவியில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன், பிடாரி அம்மன், விநாயகர் உற்சவரங்கள் அடுத்தடுத்து நாட்களில் சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள்
அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வீதி உலா
அதைத் தொடர்ந்து காலை, இரவு என இரு நேரங்களிலும் சாமி மாடவீதி உலா நடைபெற்று வருகிறது. உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதியில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவின் 8ஆவது நாளான இன்று, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் சுவாமிகள் குதிரை வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தனர். இன்று மாலை பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் உலா வர உள்ளனர்.
திரிக்கு சிறப்பு பூஜை
வரும் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதற்குப் பயன்படும் 1,150 மீட்டர் திரிக்கு இன்று சிறப்புப் பூஜை நடைபெற்றது. மகாதீபம் பயன்படுத்தப்படும் திரிக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. வரும் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குச் சன்னதி அருகே பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்பாடுகள்
இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை நேரில் காண 25 லட்சம் முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாடு முழுக்க பக்தர்கள் மகா தீபத்தை காணச் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.