ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம்
திருவண்ணாமலை: 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு அதிமுக- தேமுதிக இடையேயான ஒப்பந்தத்தை செய்தியாளர்களிடம் காட்டினார் பிரேமலதா. ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்த நிலையில் ஒப்பந்தத்தையே காட்டியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி எங்களை பற்றி வரம்பு மீறி பேசியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கூட்டணி ஒப்பந்தத்தில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக கூறி எங்களை ஏமாற்றியவர் பழனிசாமி. இதுவரை நான் எந்த இடத்திலும் ஆதாரத்தை காட்டியதில்லை.
அரசியல் நாகரீகம்
கண்ணியம், அரசியல் நாகரீகம் கருதி ஒப்பந்தத்தை காட்டாமல் இருந்த நிலையில், ஆதாரத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு எங்களை தள்ளிவிட்டார். இப்போது உண்ணாமலையம்மன் முன்பு காட்டுகிறேன். இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் எந்த ஆண்டு என இருக்கிறது என்பதையும் பாருங்கள். ஒருபுறத்தில் அவரும் மறுபுறத்தில் நானும் கையெழுத்திட்டிருக்கிறோம். 5 லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்கிறார்.
பிரேமலதா சந்தேகம்
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் எந்த ஆண்டு என்பதை போட்டுக் கொடுங்கள் என நான் கேட்ட போது, அவர், "இல்லைமா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே வருஷத்தை போட்டு கொடுப்பதில்லை. என் வார்த்தையை நம்புங்கள். இதெல்லாம் வெறும் பேப்பர்தான்மா. நான் சொல்கிறேன் 2025 -ல் ராஜ்யசபா சீட் உங்களுக்குத்தான்" என்றார். 2025 மாநிலங்களவைத் தேர்தல் வந்த போது நாங்கள் கேட்டதற்கு மறுத்துவிட்டார்.
ஒப்பந்தமே போடலை
அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை என தெரிவித்துவிட்டார் என பிரேமலதா கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
10 சீட்டா
அதன்படி சுதீஷ் ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். தேமுதிகவும் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொகுதியில் கூட வெல்லாத தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
பிரச்சாரம்
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். தேமுதிகவை அங்கீகாரம் இல்லாத கட்சி என விமர்சித்திருந்த நிலையில், "2011 ஆம் ஆண்டு தேமுதிகவால்தான் அதிமுக ஆட்சியை பிடித்தது, தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய கட்சி தேமுதிகதான்" என பிரேமலதா பதிலடி கொடுத்திருந்தார்.
அரை சதவீதம் வாக்கு வங்கி
மேலும் அரை சதவீதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 சீட் வழங்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் நீண்டகாலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் கட்சிகளுக்கு கூட குறைந்த சீட் கொடுத்த நிலையில் தேமுதிகவுக்கு 10 சீட் கொடுக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆதாரம்
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என கடந்த ஆண்டு கேட்ட போது, "நான் எங்கேயாவது சொல்லி பார்த்திருக்கிறீர்களா" என செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி மடக்கிய நிலையில் ஆதாரத்தை காட்டிவிட்டார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications