சாமியார்கள் போர்வையில் கஞ்சா, கள்ளச்சாராயம்.. அதிரடி காட்டிய தி.மலை காவல்துறை.. இனி தப்ப முடியாது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கிரிவலப்பாதையில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. சாதுக்கள் என்கிற போர்வையில் சிலர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதேபோல தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் காவல்துறை சாதுக்களுக்கு அடையாள அட்டையை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
வாட்ஸ்ஆப் வளைகாப்பு! மகிழ்ச்சியில் திளைத்த தமிழ்செல்வி! திருவண்ணாமலை மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
புகார்கள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்று. இந்த பாதையில் பல ஆசிரமங்கள் இயங்கி வருகின்றன. இந்த பாதையில் சாதுக்கள் பலர் தங்கி வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அதேபோல கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகார்கள் நாளடைவில் குவியத் தொடங்கின.
நடவடிக்கை
இதனையடுத்து, சாதுக்கள் போர்வையில் இயங்கி வரும் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர காவல்துறையினர் முயற்சி எடுத்துள்ளனர். இதன் தொடக்கமாக சாதுக்களின் கை ரேகைள் மற்றும், புகைப்படங்களை பெற்று அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கும் பணியை காவல்துறையினர் செய்து வருகின்றனர். இதன் மூலம் கைரேகைகளை பரிசோதித்து குற்றப் பின்னணி கொண்ட சாதுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகை பதிவு
இந்த அடையாள அட்டையில் QR Code இருக்கும். இந்த பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பார்வையிட்டார். இது குறித்து பேசிய அவர், "இந்த பணிகள் 10-15 நாட்களில் முடிக்கப்படும். சாதுக்கள் போர்வையில் சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சாதுக்களின் கை ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் குற்றப் பின்னணி இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று கூறியுள்ளார்.
வரவேற்பு
மேலும் சாமியார்கள் என்கிற பெயரில் போதை வஸ்துக்களை பயன்படுத்தினாலோ, விற்றாலோ இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருட்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த திருவண்ணாமலை காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர். இதேபோல பழனி உள்ளிட்ட புனித தலங்களில் தங்கியுள்ள சாதுக்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.