தீபம் வந்துருச்சு.. ருக்கு இல்லையே.. திருவண்ணாமலை மக்களின் வேதனை!
ருக்கு இல்லாமல் தீப திருவிழா களையிழந்து உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Recommended Video
திருவண்ணாமலை: தீபத்துக்கு வருவோரெல்லாம் கோயிலுக்குள் ருக்குவை காணாமல் கண்ணீர் வடிக்கிறார்கள்... ருக்குவை மறக்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள்!!
ருக்கு... திருவண்ணாமலையில் 23 ஆண்டுகளாக ஆன்மிகப் பணியாற்றிய 30 வயதான பெண் யானைதான் ருக்கு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 1995-ம் ஆண்டு அண்ணாமலையார் கோயிலுக்கு வழங்கப்பட்ட யானை.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் ரொம்ப நெருக்கம். 5-ம் பரிகாரத்தில் நின்று கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசி வழங்கிய ருக்கு இன்று இல்லை..
ருக்கு மரணம்
கடந்த மார்ச் மாதம், ஒரு குரங்கும், நாயும் சண்டை பிடிக்க, அதை பார்த்து பயந்து மிரண்டு ஓடிய ருக்கு, அங்கிருந்த இரும்பு கம்பியால் மோதி உயிரிழந்துவிட்டது. ஆனால் ஒரு யானை குரங்கையும், நாயையும் பார்த்து போய் மிரண்டு ஓடுமா என்று சந்தேகங்கள் பலமாக எழுந்தன.
குவியும் பக்தர்கள்
இந்த மரணம் தொடர்பான சர்ச்சையும் போய் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ருக்கு இல்லாமல் கோயிலே வெறுமையாகி விட்டது. குறிப்பாக தீபத்திருவிழாவுக்கு வருடா வரும் எல்லா பக்தர்களுமே ருக்குவிடம் தனி பிரியம் காட்டுவார்கள். இந்த வருடம் தீபதிருவிழாவுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
கொள்ளை அழகு
ஆனால் ருக்குவை இந்தமுறை காணாமல் பக்தர்கள் கண்ணீர் வடித்தனர். அலங்காரம் பண்ணப்பட்ட ருக்கு, வீதிகளில் ஆடி அசைந்து வருவதே கொள்ளை அழகு.. அப்படி வரும் ருக்குவை பார்க்க பக்தர்கள் முண்டியடித்து செல்வர். அது மட்டுமில்லை... ருக்குவுக்கு பதிலாக வேறு யானையும் அங்கு நிறுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
ருக்கு போல வருமா?
ருக்கு இறந்தபோதே வேறு யானை நிறுத்துமாறு பக்தர்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டதாம். ஆனால் இதுவரை அங்கு எந்த யானையும் நிறுத்தாமல் உள்ளதால் பக்தர்கள் மேலும் வருத்தப்பட்டனர். இருந்தாலும் நம்ம ருக்கு போல வருமா என்ற முணுமுணுப்பு பக்தர்களிடம் கேட்டு கொண்டே இருந்தது.