திருவண்ணாமலை தீப திருவிழா.. சிறப்பு பேருந்துகள்.. 20 ரயில்கள் எங்கிருந்து இயக்கம் - முழு விபரம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் தெற்கு ரயில்வே இன்று முதல் 20 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை மகாதீபம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

என்ன ஏற்பாடுகள்: தீபத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தயாராகி வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீப திருவிழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் வரும் 27ம் தேதி வரை செயல்படும். மேலும், 2,700 சிறப்பு பஸ்கள், 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே: சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து 25, 26 ஆம் தேதிகளில் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் தாம்பரத்திலிருந்து 26, 27 ஆம் தேதிகளில் காலை 8.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் - திருவண்ணாமலை: வேலூர் கண்டோன்மெண்ட் திருவண்ணாமலை மெமு ரயில் வண்டி எண் 06127 இன்றும் நாளையும் திருவாண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இன்று இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். வேலூர் கண்டோன்மெண்ட் திருவண்ணாமலை மெமு ரயில் வண்டி எண் 06128 26,27ஆம் தேதிகளில் திருவாண்ணாமலையில் இருந்து வேலூருக்கு இயக்கப்பட உள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.35மணிக்கு வேலூரை வந்தடையும்.
விழுப்புரம்: வண்டி எண் 06034 வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து பீச் ரயில் நிலையத்திற்கு சென்றடையும். இதே போல விழுப்புரம் திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளையும், நாளை மறுநாளும் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம் திருவண்ணாமலை மெமு ரயில் இன்றும் நாளையும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இரவு 09.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாலையை சென்றடையும். இதே போல விழுப்புரம் தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பேருந்துகள்: கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 27ஆம் தேதி வரைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிரிவலப்பாதையில்: திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்ப வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் இலவசமாக இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications