திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்? - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை: உலகப் பிரசித்திபெற்ற சிவத்தலம் அமைந்துள்ள திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். இக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோவிலை ஒட்டி அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலை உள்ளது.

இந்த அண்ணாமலையார் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பௌர்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பௌர்ணமி வருகிற 10- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்குத் தொடங்கி மறுநாள் 11 ஆம் தேதி (புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.
பௌர்ணமிக்கு முந்தைய நாள் 9 ஆம் தேதி வைகாசி விசாகம் என்பதால் அன்றைய தினத்தில் இருந்தே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
எனவே, கிரிவலம் செல்ல வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications