திருவண்ணாமலையில் காதலுக்கு எதிர்ப்பு.. எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத காட்சி.. ரேணுகா தேவி தந்த ஷாக்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த ரேணுகாதேவி பி.காம் முடித்து விட்டு தற்போது பாராசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ரேணுகாதேவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை . இதனால் ரேணுகா தேவி பெற்றோரின் கண் முன்னே செய்த காரியம் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு 2 கே கிட்ஸ் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். இன்றைக்கு சில இளைஞர்கள் பெற்றோரின் கண்டிப்பு, ஆசிரியரின் கண்டிப்பு, வேலையில் சிக்கல், வேலையில் ஏற்படும் மன அழுத்தம் என எதையும் தாங்கி கொள்ளும் பக்குவம் இல்லாமல், சகிப்பு தன்மைகள் இல்லாமல் வளர்கிறார்கள்.

தவறான முடிவு
விட்டுக் கொடுத்துச் செல்லும் பண்பு, பிரச்சனையை கையாளத்தெரியாத நிலை, விமர்சனங்களை அவமானமாக பார்க்கும் மனநிலை போன்றவை அவர்களை தவறான முடிவெடுக்க வைக்கிறது.பலர் முடிவெடுக்க முடியாத நிலை வந்தால், ஏமாற்றங்கள் வந்தால் , அதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காதலை பெற்றோர் எதிர்த்த காரணத்தால் ரேணுகாதேவி என்ற பெண் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆரணி பெண்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தில் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி இளங்காளி ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ரேணுகாதேவி (வயது 24), சந்தியா, சரண்யா ஆகிய 3 மகள்கள் இருந்தனர். இதில் ரேணுகாதேவி பி.காம் முடித்து விட்டு தற்போது பாராசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
காதலுக்கு எதிர்ப்பு
இளம் பெண் ரேணுகாதேவி வேலை செய்யும் நிறுவனத்தில் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.. அதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் ஏரியில் குதிப்பதற்காக ரேணுகாதேவி சென்றுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் அவரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்.
ஏரியில் இறங்காதே
பெற்றோர் பின்தொடர்ந்து வருவதை அறிந்த ரேணுகாதேவி வேகமாக ஏரி தண்ணீரில் இறங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் 'ஏரியில் இறங்காதே' என்று கூறியபடி அவர்களும் ஏரியில் இறங்கி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அதிக தூரம் ஏரியில் இறங்க முடியவில்லை. இதனால் ஏரியில் இறங்கிய ரேணுகாதேவி நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் ரேணுகாதேவி தண்ணீரில் மூழ்கிவிட்டார். அவரை பொதுமக்கள் தேடத்தொடங்கினர்.
மீட்க முடியவில்லை
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு இரவு 7.30 மணி தொடங்கி வரை தேடினர். ஆனால் மீட்கமுடியவில்லை. அதைத்தொடர்ந்து தேடும் பணியை கைவிட்டனர். இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். காலை 7.30 மணியளவில் ரேணுகா தேவியின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் வேல்முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்முன்னே ஏரியில் குதித்து இளம்பெண் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications