இடுப்பில் அணிந்திருந்ததை பார்த்துவிட்டு நீட் தேர்வு எழுத அனுமதி மறுத்த அதிகாரிகள்.. கெஞ்சிய மாணவர்!
திருவண்ணாமலை: நீட் தேர்வு எழுத வந்த மாணவர், இடுப்பில் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் அவரை தேர்வு அறைக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாணவனின் தந்தை, அந்த மாணவரின் அரைஞாண் கொடியை அகற்றிய பிறகு, அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
நீட் தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவ மாணவிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதால் மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7 ல் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.
வழக்கம்போல் நீட் தேர்வு தேர்வு அறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் நீட் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை அணியக் கூடாது. மேலும், ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள், காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில், 3,120 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் அந்த மாணவரை பரிசோதித்துவிட்டு, அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
அந்த மாணவர் எவ்வளவோ கூறியும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அந்த மாணவர் வெளியே வந்த நிலையில், அந்த மாணவனின் தந்தை, மாணவரின் இடுப்பில் இருந்த அரைஞாண் கொடியை அறுத்து அகற்றினார். அதன்பிறகு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.
நீட் தேர்வுக்காக மாணவர்கள் வருடக் கணக்கில் படித்து தயாராகி தேர்வுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மற்ற தேர்வுகளைப் போல அல்லாமல், ஆண்டுதோறும் நீட் தேர்வின்போது மாணவ மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாக பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications