Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுவும், வேலியே பயிரை மேய்வதும், வடமாநிலங்களை போலவே நம்முடைய தமிழ்நாட்டிலும் இத்தகைய பயங்கரங்கள் நடப்பதும், மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் நிலையத்தில் பணிபுரிபவர்கள் 32 வயதான சுந்தர், 30 வயதான சுரேஷ்ராஜ்.. இவர்கள் 2 பேருமே போலீஸ் கான்ஸ்டபிள்கள்..

Tiruvannamalai DMK Government

நேற்று விடிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று, வாழைத்தார்களை ஏற்றி வந்துள்ளது..

திருவண்ணாமலை கான்ஸ்டபிள்கள்

இந்த மினிவேனை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் நிறுத்திய கான்ஸ்டபிள்கள் இருவரும், அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 20 மற்றும் 45 வயதில் 2 பெண்கள் இருந்ததை கண்டு அவர்கள் யார் என்று விசாரித்திருக்கிறார்கள்..

அப்போது இருவரும் ஆந்திரா சித்தூரை சேர்ந்த மகளும், சித்தியும் (தந்தையின் இரண்டாவது மனைவி) என்பதும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு, தன்னுடைய உறவினர் மினிவேனில் வந்துள்ளதும் தெரியவந்தது.

ஆனாலும், 2 பெண்களையும் விசாரணை என்ற பெயரில் நைசாக பேசி, ஒதுக்குப்புறமிருந்த தோப்பு பகுதிக்கு கான்ஸ்டபிள்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே சித்தி கண்முன்னேயே 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதில் அந்த பெண் அங்கேயே மயங்கிவிழ, சித்தி அலறி கூச்சலிட, அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வேலியே பயிரை மேய்ந்தது

இதையடுத்து, மருத்துவமனையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர்..

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்தி கண்முன்னேயே

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சித்தி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக, அதிமுக கடும் கண்டனம்

அதேபோல, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளும் திமுக ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்.

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே காமுகர்களாக உருமாறி வருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக அரசுக்கு கண்டனம்

அதேபோல முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திருவண்ணாமலை சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+