கைதான 2 பேர்.. கொள்ளை போன ரூ.73 லட்சம் எங்கே.. திருவண்ணாமலை ஏடிஎம் வழக்கில் நீடிக்கும் சிக்கல்!
திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணம் ரூ.73 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து இதுவரை 3 லட்சம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதிப்பணம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம்களில் ஹரியானா கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணம் ரூ.73 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து இதுவரை 3 லட்சம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதிப்பணம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சுமார் 20 லட்சம் ரூபாயும், அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தம்மாம்பட்டு சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் அதே பாணியில் சுமார் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள எஸ்பிஐ ஏடிம் மையத்தில் இயந்தியரத்தை வெட்டி எடுத்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மிலும் வெல்டிங் மிசினை வைத்து உடைத்து 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் சுமார் 73 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சிசிடிவி காட்சி
இந்த கொள்ளை சம்பவம் நடந்த நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு இடங்களிலும் கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் சிசிடிவி கேமராக்கள் மற்றும ஹார்ட் டிஸ்குகள் எரிந்திருந்தது. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சவால் ஏற்பட்டது.கொள்ளை தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 5 மாவட்ட எஸ்பிக்கள் அடங்கிய குழுவினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரித்ததில் ஹரியானா கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தை அரங்கேற்றியருப்பது தெரியவந்தது.

சுங்கச்சாவடி
சிசிடிவி காட்சிகளை ஆராயந்த போலீசார் கார் டாடா சுமோ காரில் கொள்ளையர்கள் தப்பிய வீடியோ ஒன்றை கண்டறிந்தனர். அதை வைத்து கொள்ளையர்களை தேடிய போலிசார், கொள்ளையர்கள் ஆந்திராவை நோக்கி காரில் சென்றதை கண்டுபிடித்தனர். கொள்ளையடித்தவர்கள், சுங்கச்சாவடி வழியாக சென்றால் பின்னாளில் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயண வழியைமாற்றி உள்ளார்கள். அவர்கள் போளூரில் இருந்து தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுள்ளார்கள். செல்லும் வழியில் எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காம சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் சென்றிருந்தது.

தனிப்படை விரைந்தது
இந்நிலையில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையிலான நடத்திய தனிப்படையினர் விசாரணையில், ஹரியாணா மாநிலம் மேவாத் கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இவர்கள், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளையை அரங்கேற்றியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் ஹரியாணா மாநிலத்திற்கு விரைந்து சென்று கொள்ளையர்களை தேடிவந்தனர்.

பறிமுதல்
இதில், கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர்களான ஹரியாணா மாநிலம் நூக் மாவட்டம் சோனாரி கிராமம் முகமது இலியாஸ் மகன் முகமது ஆரிப்(35) மற்றும் ஹரியாணா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமம் ஷரூப்கானி மகன் ஆசாத்(37) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களை, ஹரியாணா மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக நேற்று நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

விரைவில் சிக்குவார்கள்
கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணம் ரூ.73லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து இதுவரை 3 லட்சம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதிப்பணம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து சவாலை சந்தித்து வரும் போலீசார் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளையில் தொடர்புடையவர்கள் அனைவரும் விரைவில் சிக்குவார் என்று தெரிகிறது. மற்ற கொள்ளையர்கள் பிடிப்பட்ட உடன், பணம் மொத்தமும் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications