4 ரூபாய்க்கு டிரஸ்.. பம்பர் ஆஃபர்.. ஆசையுடன் கடைக்கு ஓடிய மன்னார்குடி மக்கள்.. கடைசியில் பார்த்தால்?
: 4 ரூபாய்க்கு துணியை வாங்க ஆசைப்பட்டு பணத்தை இழந்தனர் பொதுமக்கள்
திருவாரூர்: எந்த டிரஸ் எடுத்தாலும் 4 ரூபாயாம்.. இதனால் ஆசை ஆசையுடன் அந்த கடைக்கு பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு சென்றார்கள்.. கடைசியில் பார்த்தால்...?
வழக்கமாக "இலவசமாக" ஒரு பொருள் கிடைக்கிறது என்றாலே அதற்கு அவ்வளவாக மதிப்பு இருப்பதில்லை.. அந்த பொருளின் இயல்புத்தன்மையும், ஈர்ப்பும் இந்த இலவசங்களால் குறைந்துவிடக்கூடும்.
ஆனால், நம் மக்கள் எந்த இலவசங்களையும் விட்டுவைப்பதில்லை.. ஓசியில் ஒரு பொருள் கிடைத்தால், சில சமயம் அதற்காக உயிரைகூடி பணயம் வைக்க துணிந்துவிடுகிறார்கள்.

ஓசியோ ஓசி
இந்த மனித பலவீனத்தைதான், வியாபாரிகள் காசாக்கி கொள்கிறார்கள்.. இலவசம் என்று சொல்லாமல் ஆஃபர் என்ற கவுரவ பெயரையும் அதற்கு சூட்டுகிறார்கள்.. எந்த ஒரு பெட்டிக்கடை வியாபாரியும், லாபம் இல்லாமல் எந்த இலவசத்தையும் தர முன்வர மாட்டார்கள் என்பதுகூட தெரியாமல், நம் மக்கள் முண்டியடித்து கொண்டு இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுவது சில சமயங்களில் வியப்பையும் கவலையையும் தந்துவிடுகிறது.இந்த ஆஃபர் என்ற பெயரில், செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி, 1 கிலோ மீன் வாங்கினால் பெட்ரோல் இலவசம், ஒரு கிலோ கறி வாங்கினால் எண்ணெய் ஃப்ரீ, என கவர்ச்சி விளம்பரங்களை அள்ளி தெளிக்கின்றனர்...

கோழிக்கறி
இப்படித்தான், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் 3 பிரிவு பிரியாணி இலவச ஆஃபர்களை அளித்து அட்ராசிட்டி செய்தார் ஹோட்டல் ஓனர் ஒருவர்.. பண்டிகை காலங்களில் ஆபர் கிடைக்கும்.. சில இடங்களில் புதிதாக கடை திறப்பு நடந்தால் ஆஃபர் கிடைக்கும்.. இப்படித்தான், மதுரை ஒத்தக்கடையில் ஒரு மீன்கடையை திறந்தார்கள்.. கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு வழங்கினார்களாம்..

4 ரூபாய்க்கு டிரஸ்
அந்தவகையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பிரபல ஜவுளி கடையின் 4ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதலில் வரும் 400 நபர்களுக்கு எந்த டிரஸ் எடுத்தாலும், ஒரு டிரஸ் 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்களும், காலை 8 மணி முதலே அந்த கடைக்கு முன்பு குவிய ஆரம்பித்துவிட்டனர்.. இதனால் அந்த கடை அமைந்துள்ள, ருக்மணிபாளையம் ரோட்டில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.. கடைக்குள்ளும் கூட்டம், கடைக்கு வெளியிலும் கூட்டம் முட்டித்தள்ளியது..

"ஆ" அலறல்
அதற்கேற்றார்போல், கடையில் மலைபோல் டிரஸ்கள் குவிக்கப்பட்டிருந்தன.. அதையெல்லாம் "ஆவென" வாயை பிளந்து பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தும், வாங்கி கொண்டிருந்தனர்.. அந்த சைக்கிள் கேப்பில் மர்மநபர்கள் நுழைந்துவிட்டனர்.. ஆர்வத்துடன் டிரஸ் வாங்க போட்டிக் கொண்டிருந்தவர்கள் சிலரிடம், ஆட்டைய போட்டுள்ளனர்.. அவர்களின் செல்போன்கள் பறிபோய் உள்ளன.. பர்ஸ்கள் திருடி போயுள்ளது.. பிக்பாக்கெட் நிறைய நடந்துள்ளது.. பணத்தை காணோம் என்று ஆங்காங்கே அலறல்கள் வெடித்தன.. 4 ரூபாய்க்கு டிரஸ் வாங்க ஆசைப்பட்டு, தங்களின் விலை உயர்ந்த போன், பணம், பர்ஸ் போன்றவைகளை இழந்து கண்ணீருடன் திரும்பி சென்று கொண்டிருந்தனர் பொதுமக்கள்.. இதெல்லாம் தேவையா?












Click it and Unblock the Notifications