இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் படுகொலை... நீடாமங்கலத்தில் நிலவும் பதற்றம்..!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழ் ஆர்வன் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருந்த தமிழ் ஆர்வன், நீடாமங்கலம் பகுதி மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்.
இவரது கொலைக்கு அரசியல் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் ஆர்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திருவாரூர் மாவட்ட குழு உறுப்பினராகவும், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராகவும் இருந்த இவர், நேற்று மாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே தனது காரில் இருந்து இறங்கியிருக்கிறார். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவரை தாக்கத்தொடங்கிய அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தமிழ் ஆர்வனை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட்
கொலை செய்யப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தமிழ் ஆர்வன் என்பதை அறிந்ததும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் நிகழ்விடத்திற்கு குவியத் தொடங்கினர். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றமான சூழல் உருவாகியது.

மகன் வக்கீல்
திமுக, அதிமுகவுக்கு இணையாக அந்தக் கட்சிகளின் நிர்வாகிகளோடு போட்டி போட்டு நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தி வளர்த்து வைத்திருந்தவர் இந்த தமிழ் ஆர்வன் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட தமிழ் ஆர்வனின் மகன் ஸ்டாலின் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியினர் போராட்டம்
இதனிடையே உளவுத்துறை திறம்பட செயல்படவில்லை எனக் கூறி தமிழ் ஆர்வனின் உடலை கொடுக்க மறுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்ததால் நிலைமை மேலும் மோசமானது. கொலையாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தமிழ் ஆர்வன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் நேற்று மாலை முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட போலீஸார் நீடாமங்கலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications