கஜானாவை காலி செய்தது அதிமுக.. விரைவில் அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்.. மு.க.ஸ்டாலின்!
எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவாரூர்: சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாகவும், எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் கோ.பாலு இல்லத் திருமணத்தை தலைமை வகித்து நடத்தி வைத்தார்.
இந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திருவாரூர் மாவட்டம் வந்துள்ளது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை மாவட்டங்கள், மாநிலங்கள் நாடுகள் சென்றிருந்தாலும், திருவாரூர் வந்திருப்பது தனி உணர்வு தான்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இங்கு நடந்திருப்பது சுயமரியாதை திருமணம் மட்டுமல்ல, இதுவொரு தமிழ் திருமணம். சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதை கொண்டு வந்தவர் அண்ணா. எந்த தமிழுக்காக நம் இயக்கம் பாடுபட்டதோ, அந்த தாய்மொழியான அழகுத் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம்.

எஞ்சிய வாக்குறுதிகள்
எஞ்சிய வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். உங்களை நம்பி உங்களின் அன்போடு பொறுப்பேற்றுருக்கக் கூடிய முதலமைச்சர் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என்று கூறினோம். அதனை ஆட்சிக்கு வந்த பின், உடனடியாக நிறைவேற்றினோம். விவசாயிகள், வணிகர்கள், சிறு குறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களின் கருத்தையும் கேட்ட பின்னரே திமுக அரசு ஒவ்வொரு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும். இப்போதும் கருணாநிதி வழியில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

களஆய்வில் முதல்வர்
சில திட்டங்கள் நிதி பிரச்சினைக் காரணமாகவோ, சட்டரீதியாகவோ, அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக முடிவடையாத சூழலில் இருக்கிறது. அதனை நேரடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சரின் கள ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக வேலூர் மண்டலம், இரண்டாவதாக சேலம் மண்டலத்தில் ஆய்வு செய்கிறேன். அடுத்ததாக வரும் 5ம் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

கஜானாவை காலி செய்த அதிமுக
ஆனால் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் எதையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. சில திட்டங்களை நிதி பற்றாக்குறை காரணமாக நிறைவேற்றப்படவில்லை. நிதி மட்டும் முறையாக இருந்திருந்தால், கஜானாவை முறையாக வைத்திருந்தால், அதனையும் நிறைவேற்றி இருப்போம். ஆனால் கஜானாவை காலி செய்துவிட்டு கடனாளியாக்கிவிட்டு சென்ற காரணத்தால், சமாளிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அதனை சமாளித்து, மீதமுள்ள திட்டங்களையும், பணிகளையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications