பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை! வழக்கின் பின்னணியும், தண்டனை விவரமும்!
திருவாரூர்: கடந்த 2015ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது பொது சொத்தை சேதப்படுத்தியதாக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், காரியமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு தொடங்கப்பட்டது. இந்த எண்ணெய் கிணற்றை தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளரான பி.ஆர் பாண்டியன் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவராக இருந்த செல்வராஜ் உட்பட 22 பேர் சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மன்னார்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 20 பேரில் 18 பேரை நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது.
மீதம் இருந்த இருவரில் பி.ஆர் பாண்டியனுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஊராட்சி மன்ற தலைவருக்கும் 13.5 ஆண்டுகள் சிறை மற்றும் 13,500/- அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்துள்ளார். தண்டனையையடுத்து இருவரையும் தற்போது மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications