திருவாரூர் திமுக பிரமுகர் கொலை வழக்கு.. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிடை நீக்கம்
திருவாரூர்: திருவாரூர் திமுக பிரமுகர் கொலை வழக்கு விவகாரத்தில் உரிய விசாரணை செய்ய தவறிய குற்றச்சாட்டில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியா உல்ஹக் உத்தரவிட்டார்
திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்த 48 வயதாகும் பாபு தொழிலதிபர் ஆவார். இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். மேலும் திமுக பிரமுகராகவும் உள்ளார். இவருடைய மகன் பாலா(24). இவர் பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

தஞ்சாவூர் ராஜாமணி நகரில் பாபுவின் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க பாபு தனது மகன் பாலாவுடன் ஜீப்பில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு வந்தார்.காலை 11 மணி அளவில் தஞ்சை ஞானம் நகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மொய்க்கவர் வாங்குவதற்காக ஜீப்பை பாபு நிறுத்தி உள்ளார்.
உடனே பாலா ஜீப்பில் இருந்து கீழே இறங்கி சென்று கடையில் மொய்க்கவர் வாங்கி கொண்டு ஜீப்பில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது திடீரென எதிரே கார் ஒன்று வேகமாக வந்து ஜீப்பை மறித்து நின்றது. அந்த காரை ஓட்டி வந்தவர் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி உள்ளார்கள்.
இதனால் ஜீப்பில் இருந்து பாபு கீழே இறங்க முயற்சி செய்துள்ளார்.
உடனே காரில் இருந்து 2 பேர் அரிவாளுடன் இறங்கி வந்து ஜீப்பில் இருந்த பாபுவை கீழே இழுத்துபோட்டு சரமாரியாக வெட்டியுள்ளார்கள். தன் கண் முன்பு தனது தந்தை வெட்டப்படுவதை பார்த்த பாலா அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும் அவரை காப்பாற்றும்படி சத்தம்போட்டார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் பாபுவை வெட்டி சாய்த்த 2 பேரும் மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த காரில் தப்பி சென்றுவிட்டனர். ரத்தவெள்ளத்தில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், டிஎஸ்பிக்கள் நித்யா, ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாபுவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்ட பகலில் நடந்த படுகொலை தொடர்பாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் பாபுவின் மகன் பாலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய தஞ்சை தாலுகா போலீசார் , தஞ்சை அண்ணாநகர் சீதாநகரை சேர்ந்த 59 வயதாகும் முருகேசன் , தஞ்சையை அடுத்த வயலூர் வடக்கு தெருவை சேர்ந்த 48 வயதாகும் சிவக்குமார் , தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (48) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக புதிய விவகாரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, திமுக பிரமுகர் பாபு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டி.ஜி.பி.க்கு புகார் மனு அனுப்பி இருந்தார். பாபு வசிக்கக்கூடிய பகுதி திருவாரூர் மாவட்டம் வைப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். இதனால் அந்த மனு விசாரணைக்காக வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு திமுக பிரமுகர் பாபுவின் மனுவை காவல்துறை தலைமையகம் அனுப்பி வைத்தது.
இதனிடையே பாபு கடந்த ஜூன் 9-ந் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பாபுவின் மனு மீது உரிய விசாரணை செய்ய தவறியதாக வைப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியா உல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications