சாலையோர மரண குழி.. கம்பி குத்தி துடிதுடித்து மரணித்த அரசு ஊழியர்.. திருவாரூரில் ஷாக்
திருவாரூர்: இரு சக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் ஒருவர் சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து கம்பிகள் குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் காவல்துறையினர் சாலை பணி ஒப்பந்ததாரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் குமார் என்பவர் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி குமார் உயிரிழந்ததாக தெரிகிறது. குமாரின் உடலை மீட்ட திருவாரூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக சென்னை பூந்தமல்லியில் மின்சார வாரியம் சார்பில் புதைவட கேபிள் அமைக்க தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் ஒரே நாளில் இருவேறு இடங்களில் இரண்டு உயிர்கள் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை டவுனை சேர்ந்தவர் குரு கணேஷ். இவரும், நண்பர்கள் 5 பேரும் விடுமுறை தினம் என்பதால் அவரது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு மீண்டும் திருச்செந்தூரில் இருந்து காரில் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காரை குருகணேஷ் ஓட்டி வந்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருகணேஷ், டவுண் ரெங்கநாதபுரம் கண்ணன் மகன் கந்தசாமி, சுடலைமணி, முத்துகுமார், மனோஜ் குமார், ஹரிஹரன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல சாலையோர பள்ளங்களினால் இன்று இரண்டு உயிர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications