கன மழை எதிரொலி.. அதிகாலையில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.. மனைவி பலி, கணவர் தப்பினார்
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை கன மழையால் பாதிக்கப்பட்டிருந்த வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் மனைவி பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் வீசிய கஜா புயலின் காரணமாக புயல் வீசிக் கொண்டிருக்கும் போது பல்வேறு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. மரங்கள் வீட்டின் மீது விழுந்து சேதத்தை உண்டாக்கின. இந்த நிலையில் புயல் கரையைக் கடந்து நேற்று காலை முதல் அமைதியான சூழல் நிலவிய போதும் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக வலுவிழந்த வீடுகள் தற்போது இடிய தொடங்கியுள்ளது.
அதன் வெளிப்பாடாக திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலத்தில் மேட்டு தெருவில் வசித்து வரும் முருகேசன் வீட்டின் முன் பக்க சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.
இதில், சம்பவ இடத்திலேயே லதா உயிரிழந்தார். முருகேசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
மாவட்டம் முழுவதும் கஜா புயலின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து 8 பேரும் மரம் விழுந்து ஒருவரும் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்