இல்லாத ஹோட்டலுக்கு பில்.. மோப்பம் பிடித்த அதிகாரிகள்.. முன்னாள் அமைச்சர் காமராஜ் சிக்கியது எப்படி?
திருவாரூர் : குறிப்பிட்ட முகவரியில் இல்லவே இல்லாத ஹோட்டலை காமராஜின் நண்பர்கள் வாங்கியதாக கணக்கு இருந்ததை தொடர்ந்துதான் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அமைச்சர் காமராஜை மோப்பம் பிடித்ததாக கூறப்படுகிறது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டி, நேற்று முன்தினம் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது.
இந்த ரெய்டுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தஞ்சாவூரில் உள்ள ஹோட்டலை வாங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலே அமைச்சர் காமராஜுக்கு எதிராகத் திரும்பியது எனக் கூறப்படுகிறது.
எனக்கு பல கோடி கடன் இருக்கு.. செலவுக்கு வச்சிருந்த பணம் அது.. ரெய்டு பற்றி காமராஜ் பரபர பேட்டி!
ரெய்டில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் நேற்று முன் தினம் அதிரடி சோதனை நடத்தினர். உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைக் குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை எட்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.
கணக்கில் வராத பணம்
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் தங்கம், 23,960 கிராம் வெள்ளி, ஒரு ஐபோஃன், கணினி, பெண்டிரைவ், ஹார்ட் டிஸ்க், வங்கியில் இருக்கக்கூடிய வங்கி பெட்டக சாவி, ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 பேர் மீது
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த 8 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது. அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக காமராஜ், அவரது மகன்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை காமராஜ் மீது குறிவைத்ததற்குப் பின்னணியில் ஒரு ஹோட்டல் தொடர்பான விவகாரம் இருந்துள்ளது.
சிக்கியது எப்படி?
கே.ஆர்.அண்ணாமலை செட்டியார் என்பவருக்கு சொந்தமான என்.ஏ.ஆர்.சி ஹோட்டல் நிறுவனத்தை ரூ.27 கோடிக்கு காமராஜின் நண்பர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் 2016ஆம் ஆண்டு வாங்கியதாக ஆவணங்கள் இருந்துள்ளன. இந்த ஹோட்டல் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட முகவரிக்குச் சென்று பார்த்தபோது அங்கு அப்படி ஒரு நிறுவனமே செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், காமராஜின் குறிப்பிட்ட நண்பர்களின் வருமான வரி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இவ்வளவு பெரிய தொகைக்கு சொத்து வாங்கும் முகாந்திரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
காமராஜ் கொடுத்த பணத்தில்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் காமராஜின் பணத்தில் தான் அவரது நண்பர்கள் ரூ.27 கோடிக்கு அந்த ஹோட்டலை வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல, காமராஜின் மகன்கள் கட்டி வரும் மருத்துவமனைக்கான செலவும் பல கோடி என்பதால் அதற்கும் எங்கிருந்து பணம் வந்தது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தோண்டியுள்ளனர்.
கறுப்பு பணத்தை வெள்ளையாக்க
இந்த இரண்டு சொத்துகள் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், இரண்டு பரிவர்த்தனைகளிலும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதையடுத்துத்தான், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான ஆதாரங்களை தயார் செய்துகொண்டு ஒரே நேரத்தில் திடீர் சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இல்லாத ஹோட்டல்
ஹோட்டலே இல்லாத நிலையில், அதற்கு பணம் கொடுத்ததாக ஆவணங்களை தயாரித்ததால் தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் காமராஜ். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, ஹோட்டலே இல்லாத இடத்திற்கு பணம் கொடுத்த விவகாரத்தால் தான் காமராஜ் சிக்கினார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.