அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்..மருத்துவமனையில் மக்கள் அனுமதி..மார்ச் 10ல் சிறப்பு காய்ச்சல் முகாம்
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திருவாரூர்: வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
டெல்லி, சென்னை போன்ற பெரும் நகரங்களில் மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது, H3N2 இன்ஃப்ளூயன்ஸா என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது. டெல்லியில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம்.
காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 26பேர் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எட்டு நபர்கள் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் வந்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அதிகம் கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
இதனிடையே வரும் 10ஆம் தேதி தமிழ்நாட்டில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செயல்பட்டு வருகிறோம். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.












Click it and Unblock the Notifications