அமமுக உடன் கூட்டணியா? அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? - ‘பரபர’ பதில் சொன்ன கே.எஸ்.அழகிரி!
திருவாரூர் : திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி, அமமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறதா எனும் கேள்விக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக்கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம், அமமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கார்த்தி சிதம்பரம் வரப்போகிறார் என தகவல்கள் உலவி வருவது குறித்தும் பேசியுள்ளார் கே.எஸ்.அழகிரி.
இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு?
ராகுல் நடை பயணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் 5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்." என்றார்.
அமமுக உடன் கூட்டணி
தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் டி.டி.வி.தினகரனின் அமமுக கூட்டணி அமைப்பது குறித்து எங்களுடன் இதுவரை பேசவில்லை. அப்படி பேசினால் தேர்தல் சமயத்தில் அதுகுறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம்
மேலும், "காங்கிரஸ் தலைவர் தேர்தல் முறைப்படி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த அகில இந்திய தலைவர் யார் என்பதை ஒரு விவாதப்பொருள் ஆக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்தால் அதை வரவேற்போம். அவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படும்.
போட்டி அரசாங்கம் நடத்தும் ஆளுநர்
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். ஆளுநர் மாளிகையில் அரசியல் ரீதியான சந்திப்புகள், கருத்தரங்கங்கள் நடத்தப்படுவது முறையல்ல. கூட்டாட்சி முறையில் செயல்படும் அரசாங்கத்தில் தமிழக ஆளுநர் ரவி தனது எல்லையை மீறக்கூடாது.
பாஜக வளரவில்லை
பாஜக தமிழகத்தில் காலூன்றுவது என்பது அரசியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நடக்காது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக பாஜகவுக்கு கூட்டம் கூட்டப்படுகிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்று கூறப்படுவது ஒரு மாயை. காங்கிரஸ் கட்சிக்கு வருகிற கூட்டம், தானாக சேருகிற கூட்டம்." எனத் தெரிவித்துள்ளார்.