வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்! சிவப்பு, பச்சை நிறத்தில் மிளிர்ந்த லைட்.. திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பாழவனகுடி கிராமம் அருகே விவசாய நிலத்தில் மர்ம பொருள் ஒன்று கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிக்னல் வரும் ரெசீவர் போன்ற மர்ம பொருள் கிடந்தது பற்றி கிராமத்தினர் போலீசாருக்கு தெரிவித்த நிலையில், இந்த மர்ம பொருள் எப்படி இங்கே வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழவனகுடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயி விஜயன் என்பவர் தனது நிலத்தில் பயிறு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று விஜயன் தன் நிலத்தில் மருந்து அடிப்பதற்காக காலையில் சென்றுள்ளார். அப்போது அவரது வயலில் மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. டவர் ரெசீவர் போன்று, சிவப்பு மற்றும் பச்சை நிற லைட் விட்டு விட்டு எரிந்ததால் அச்சமடைந்த விவசாயி இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வைப்பூர் காவல் நிலைய போலீசார் அந்த மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த மர்ம பொருள் எதும் எலக்ட்ரிக் சாதனமா அல்லது வேறு ஏதும் பொருளா என்று தெரியாததால் அது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். வானிலை நிலவரத்தை பரிசோதிக்க பலூனுடன் இணைத்து பறக்க விடப்படும் கருவி போன்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அதனை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. விவசாய நிலத்தில் திடீரென கிடந்த மர்ம பொருளால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். முன்னதாக இந்த கிராமம் அருகே நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். மகளிர் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனைக்கூட்டம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்க இரண்டு முறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். இதனால் இந்த மர்ம பொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.













Click it and Unblock the Notifications