”ஸ்டாலின் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்’’ பிரச்சாரத்தில் எடப்பாடி காட்டிய அரசியல் நாகரீகம்
திருவாரூர்: லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலின் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசியிருப்பது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற எழுச்சிப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவிடைமருதூர், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை செய்தார்.

மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட மேலராஜ வீதியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை விமர்சித்து பேசினார். அதிமுக எப்போதும் விவசாயிகளுக்கு நன்மை செய்கிற அரசு என்றும் பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர் விரைவில் பூரண உடல்நலன் பெற வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் பிரச்சாரத்தின் இறுதியில் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நான் வரும்போது எனக்கு கிடைத்த செய்தி.. முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றனர்.. அவர் பூரண உடல்நலம் பெற என் சார்பில், உங்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறினார்.
சிபில் ஸ்கோர் கேட்கிறாங்க
திமுகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இன்று வங்கியில் கூட பயிர்க் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.. சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள்.. இந்த திமுக தட்டிக் கேட்கத் திறனற்ற அரசாக உள்ளது.. திமுக ஆட்சியில் 53 ஆயிரம் கோடி கடன் கொடுத்ததாக சொல்கிறார்கள்.. எல்லாம் பச்சை பொய்..
மேட்டூர் அணை நீர் கடைமடைக்கு சேரவில்லை என்று இன்று காலை விவசாயிகள் என்னிடம் மனு கொடுத்தனர். தூர்வாருவதிலும் இந்த அரசு ஊழல் செய்துள்ளது. ஏரி, குளம் குட்டை எல்லாம் நீர் தேங்குவதற்கு குடிமராமத்துத் திட்டம் கொண்டு வந்தோம். தூர்வாரி அந்த வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம்.. இதனால் ஏரி ஆழமாச்சு, விளைச்சல் நல்லா கிடைச்சது.
அடிக்கடி கரன்ட் கட் ஆகுது
இந்த ஆட்சியில் எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். திருவாரூரில் நான் தங்கியிருந்தபோது அடிக்கடி கரன்ட் கட் ஆகுது.. திமுக ஆட்சி வரும்போதெல்லாம் கரன்ட் கட் ஆகிறது.. விவசாயத் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கொடுத்தோம்.. இலவச ஆடு, மாடு, கோழி, உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவித்தொகை, சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்து 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கொடுத்தோம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததை
ஸ்டாலில், அவரது கூட்டணி கட்சியினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கிறாங்க.. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் நீங்க ஏன் பதறுகிறீர்கள்.. அது எங்கள் விருப்பம்.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததுமே திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி, திமுக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சியா?
அதிமுக அரசை குறை சொல்ல எள் முனை அளவுக்கும் ஆதாரமில்லை, அதனால்தான் கூட்டணியை விமர்சிக்கிறார்கள்.. எப்போது பாத்தாலும் மதவாதம் என்கிறார்கள். இரண்டு நாள் முன்பு அமைச்சர் நேரு சொல்கிறார், எடப்பாடி வீட்டில் ரெய்டு, அதனால் கூட்டணி என்கிறார். நேரு அவர்களே உங்க மகன், தம்பி வீட்டில் ரெய்டு நடந்தது. அதுக்கு என்ன பதில் சொல்வீங்க? எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
நிரபராதியாக உங்கள் முன் நிற்கிறேன்
என் மீது திமுக சார்பில் கேஸ்போட்டனர். பின்னர் அவர்களே வாபஸ் வாங்குகிறேன் என்றனர்.. அதை நான் ஏற்கவில்லை. வழக்கை நடத்தி நிரபராதியாக உங்கள் முன் நிற்கிறேன்.. உங்களைபோல வாய்தா வாங்குவதில்லை.. நீங்களும் அப்படி செய்யுங்க. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான்.
கருணாநிதி இருக்கும்போதும் ஊழல்.. இன்றைக்கும் டாஸ்மாக்கில் ஊழல்.. 10 ரூபாய் என்றாலே செந்தில் பாலாஜி என்று ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை எல்லாம் கரூர் கம்பெனி ஏலத்தில் எடுத்து நடத்துறாங்க.. ஒருநாள் 15 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் வருகிறது.. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் செந்தில் பாலாஜி மூலம் மேலிடத்துக்கு போவதாகத் தகவல். அமலாக்கத்துறை இன்னும் தோண்டி வருகிறது, விரைவில் முழுவதும் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications