வண்டிய நிறுத்துங்க.. கமலாலயத்தை ரசித்து படியில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்! இரவில் சுவாரசியம்.. ஆஹா
முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து திருவாரூர் புறப்பட்டு சென்றார்.
திருவாரூர்: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சொந்த ஊரான திருவாரூருக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று இரவு திருவாரூரில் உள்ள கமலாலயத்தை முதல்வர் ஸ்டாலின் ரசித்து பார்த்ததோடு, மின்னொளியில் கமலாலயத்தின் படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தையான கருணாநிதியின் நினைவை பகிர்ந்து திடீரென நெகிழ்ச்சியடைந்தார். மேலும் அவர் இரவில் படகு சவாரி செய்தார்.
தமிழக முதல்வர் மாவட்டங்கள் தோறும் விசிட் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் திருவாரூருக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். அதன்படி சென்னையில் இருந்து நேற்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.

திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நேற்று பகல் 11.15 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின் திருச்சிக்கு சென்றார். அங்கு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றார். மாலையில் காட்டூருக்குச் சென்ற முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கமலாலயத்தை ரசித்து..
அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான கமலாலய தெப்பக்குளத்துக்கு சென்றார். கமலாலய குளத்தை பார்வையிட்டார். படிக்கட்டுகளில் அமர்ந்து மின்னொளியில் மெல்லிய அலைகளில் ஜொலித்த குளத்தை ரசித்தார். பிறகு இரவில் கமலாலயம் குளத்தில் படகில் பயணம் செய்தார்.

ட்விட்டரில் நெகிழ்ச்சி
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம் கடல் போலத் ‛தோற்றமளிக்கும்'. ஆனாலும் அது குளம்தான். அதன் ‛நடுவண்' கோவில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். எநஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்'' என தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில்
இந்நிலையில் 2வது நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழாவில் தலைமை ஏற்று நடத்த உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications