"சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது.." ஆளுநர் ரவி ராஜினாமா செய்திருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தாக்கு
திருவாரூர்: இன்று லோக்சபா தேர்தலுக்காகத் திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், அவர் இந்நேரம் பதவி விலகி இருக்க வேண்டும் என்றும் கடுமையாகச் சாடினார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் தேர்வை முடித்து திமுக இப்போது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதற்கட்டமாக நேற்று திருச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
முதல்வர் ஸ்டாலின்: தொடர்ந்து இன்று திருவாரூரின் கொராச்சேரி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் அதிமுகவையும் பாஜகவையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். வார்த்தைகளால் வடை சுடும் பிரதமர், தமிழகத்திற்கு நிவாரணம் எதையும் வழங்கவில்லை என்றும் இதனால் மக்கள் நிச்சயம் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
இந்தியா கூட்டணியை அமைக்க நான் முக்கிய காரணமாக இருந்தேன் என்பதால் பிரதமருக்கு திமுக மீது கோபம் என்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ் மற்றும் தமிழருக்கு எதிரான ஆட்சி பாஜகவுக்கு ஓட்டுப் போட்டால்.. அதுவே நமக்கு வேட்டு என்றும் விமர்சித்தார். மேலும், பாஜக பாணி சர்வாதிகாரம் தான். அவர்கள் காஷ்மீரில் என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டின் கட்டமைப்பா பாஜக அரசு சிதைத்துவிட்டது என்றும் சாடினார்.
எதிர்க்கட்சிகளை அழிக்க முயலும் பாஜக: தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவில்லை என்ற மோடியின் கனவை இந்தியா கூட்டணி அழித்துவிட்டது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக முயல்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த பிரதமர் மோடி திமுகவைத் தரக்குறைவாகப் பேசுகிறார். அதைப் பற்றி கவலை இல்லை. இதுபோல எத்தனையோ ஏச்சுக்கள், மிரட்டல்களைப் பார்த்தவர்கள் நாங்கள். வசவுகளை வாங்கியவர்கள்.
கருணாநிதி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் தென்றலை தீண்டியது இல்லை. ஆனால் தீயைத் தாண்டி உள்ளோம். இந்த எதிர்த்தாக்குதல் தான் திமுகவை மேலும் உற்சாகமாக வேலை செய்ய வைக்கும்.
ராஜினாமா செய்யுங்கள்: தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை கொடுத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அரசியலமைப்பையும் அவமதித்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று நீதியரசர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதுவரை எந்த ஆளுநரும் இந்தளவுக்கு உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். ஆளுநர் ரவி ராஜினாமா செய்துவிட்டுப் போய் இருக்க வேண்டும்.
அவரை கடைசியில் களைத்துப் போய் நேற்று பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை முடித்துவிட்டுத் தான் எனது பிரச்சாரமே தொடங்கி இருக்கிறது. இத்தனை காலம் ஆளுநர் செய்து வந்த செயலை இப்போது பிரதமர் மோடி செய்யத் தொடங்கி இருக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர வேண்டும். அப்போது தான் அவர் மீதான பொதுமக்கள் கோபம் குறையாமல் இருக்கும். தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாதவர் வாக்கு பெற மட்டுமே வருகிறாரே என்பது மக்களுக்கு அப்போது தான் புரியும்" என்று சாடினார்.












Click it and Unblock the Notifications