டெல்டாவில் பயிர் சேதம்! ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு தருக! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரும் தமிமுன் அன்சாரி.
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு பாரபட்சமின்றி ரூ.25,000 இழப்பீடு தர வேண்டும் என தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கன மழையால் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் இரண்டாவது நாளாக மஜக பொதுச் செயலாளர்தமிமுன் அன்சாரி சேதத்தை பார்வையிட்டார்.
நேற்று நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட அவர், இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அங்கு கட்டிமேடு, ஆதிங்கம், பாண்டி, பிச்சன்கோட்டகம் பகுதிகளில் மழையில் மூழ்கிய வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது, ''பிப்ரவரி மாத திடீர் மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் இப்பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.''
''சில இடங்களில் கால்வாய்கள் தூர் வாரப்படாததால், மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி விட்டது. இதை அதிகாரிகள் இனி கவனத்தில் கொள்ள வேண்டும்.''
''தமிழக அரசு அறுவடை செய்யாத அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி, ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி உரிய முழு இழப்பீடும் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் .''இவ்வாறு பேட்டியளித்தார்.
மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு தானும் சேத விவரங்களை எடுத்துச் செல்லவுள்ளதாக கூறினார். அதேபோல் மூன்றாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட இடங்களில் பார்வையிட போவதாக கூறினார்.