ஸ்டாலின் ஃபார் திருவாரூர்.. இடைத்தேர்தலில் அவர்தான் நிற்க வேண்டும்.. திமுகவில் வலுக்கும் கோரிக்கை
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சென்னை: திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயாராகி வருகிறது. இதற்கு திமுகவும் தயாராக தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
ஸ்டாலின் கோரிக்கை
இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். நேற்று ஸ்டாலினை சந்தித்த திமுக நிர்வாகிகள் அவரிடம் இந்த கோரிக்கையை நேரடியாக வைத்து இருக்கிறார்கள். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின் நிற்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
பூண்டி கலைவாணன் கோரிக்கை
நேற்று ஸ்டாலினை சந்தித்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் இதே கோரிக்கையை வைத்ததாக தெரிகிறது. திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின்தான் நிற்க வேண்டும் என்று பூண்டி கலைவாணன் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வைத்ததாக கூறப்படுகிறது.
டிஆர்பி ராஜா கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியின் எம்எல்ஏவான திமுகவை சேர்ந்த டிஆர்பி ராஜாவும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். எல்லா உறுப்பினர்களும் ஸ்டாலின்தான், திருவாரூரில் நிற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஸ்டாலின் திருவாரூரில் நின்றால் சிறப்பாகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
|
வைரல் ஆனது
இதற்காக இணையத்தில் #MKSforTIRUVARUR எம்கேஎஸ் ஃபார் திருவாரூர் என்று ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. மு.க ஸ்டாலின் திருவாரூரில் நிற்க வேண்டும் என்ற பொருளில் இந்த டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் பலர் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
எப்போது முடிவு
திமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக உறுப்பினர்களின் விண்ணப்பங்களை திமுக தலைமை பெற்று வருகிறது. இந்த விண்ணப்ப பரிசீலனைக்கு பின் விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் செய்யப்படுவார்கள். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை திமுக இந்த வாரம் முடிவு செய்யும் என்று கூறுகிறார்கள்.