பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூர் இடைத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் தகவல்
திருவாரூருக்கு பிப்ரவரி 7ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை: பிப்ரவரி 7-ம் தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளார். அதேசமயம் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் திருவாரூருடன் இணைத்து நடத்தப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது சம்பந்தமான இறுதி தீர்ப்பும் சமீபத்தில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றாக வேண்டிய நிலை உள்ளது.
இந்த 18 தொகுதியுடன் சேர்த்து மறைந்த கருணாநிதியின் தொகுதியான திருவாரூர், மற்றும் மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸின் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் சேர்த்து என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
20 தொகுதிகள்
இந்த 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான அதிமுகவிலிருந்து எல்லா கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றன. 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என இவர்கள் அனைவருமே நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக அந்தந்த கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.
பிப்ரவரி 7ம் தேதி
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இது சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் சொல்லும்போது, "தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதனால் வருகிற பிப்ரவரி 7-ம் தேதிக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
முடிவு செய்ய முடியாது
திருப்பரங்குன்றம் தேர்தல் குறித்து இப்போது உடனே முடிவு எடுக்க முடியாது. ஏனெனில் அந்த தொகுதி சம்பந்தமாக வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. அந்த தீர்ப்பை பொறுத்துதான் அந்த தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
முடித்து வைப்பு
இவ்வாறு பிப்ரவரி 7-ம் தேதி திருவாரூக்கு இடைத்தேர்தல் என்றும், திருப்பரங்குன்றத்துக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டதால், மனுதாரர் ரமேஷின் வழக்கு இன்றோடு முடித்து வைக்கப்பட்டது.