50 ரூபா, லேஸ், குர்குரே சிப்ஸ் கொடுத்து கடத்த முயற்சி! தப்பியோடிய திருவாரூர் சிறுவன் பரபரப்பு புகார்
திருவாரூர்: திருவாரூரில் 6ஆம் வகுப்பு மாணவனை சில மர்ம நபர்கள் கடத்த முயற்சித்ததாக புகார் கூறியதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூரில் 6ஆம் வகுப்பு மாணவன் பள்ளியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த கடத்தல் முயற்சி நடந்ததாக அந்த மாணவர் பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில் நான் எனது பிரண்டுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். அப்போது வழக்கமாக இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் இடத்தில் நான் இறங்கிக் கொண்டேன். அப்போது இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
என்னிடம் முகவரி கேட்பது போல் கேட்டு என்னை வண்டியில் ஏறுமாறு மிரட்டினர். உடனே நான் ஏறமாட்டேன் என்றேன். இதையடுத்து என்னை மிரட்டி பின்னால் வந்த காரில் உட்கார வைத்தனர். கார் சிறிது தூரம் சென்ற போது காரில் இருந்தவர்கள் எனக்கு 50 ரூபாய் நோட்டையும் லேஸ் சிப்ஸ், குர்குரேவையும் கொடுத்தனர்.
நான் 50 ரூபாய் நோட்டை அவர்களிடமே திருப்பி கொடுத்தேன். அப்போது சிக்னல் வந்தது. கார் நின்றது. அந்த நோட்டை அவர்கள் வாங்கும் போது கீழே விட்டுவிட்டார்கள். கீழே குனிந்து எடுக்க முயன்ற போதுதான் நான் காரை விட்டு இறங்கி ஓடி வந்தேன். அப்படியும் அவர்கள் என்னை பிடிக்க துரத்திக் கொண்டே வந்தார்கள்.
மக்கள் நடமாட்டம் இருந்த பகுதிக்கு நான் ஓடி வந்ததால் அவர்கள் என்னை துரத்தாமல் திரும்பி சென்றுவிட்டனர். உடனே வீட்டிற்கு ஓடி வந்து என் அம்மாவிடம் விஷயத்தை கூறினேன். அவர் போலீஸில் புகார் கொடுக்கலாம் என என்னை அழைத்து வந்தார். இவ்வாறு சிறுவன் தெரிவித்திருந்தார்.
சிறுவன் கூறுவதை வைத்து கடத்த முயற்சிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அண்மைக்காலமாக குழந்தை கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் பெருகுகின்றன. அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் என சென்னையில் ஒரு வதந்தி பரவியதையும் போலீஸார் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications