அடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்.. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனின் உறவினர் கைது
திருவாரூர்: திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள பிரம்மாண்டமான லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சுவரில் ஓட்டை போட்ட திருடர்கள் அங்கிருந்த 30 கிலோ தங்க நகைகளை அள்ளிச் சென்றனர்.
கடைக்குள் விலங்குகளின் முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர்கள் குறித்து கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சவால் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களா என்ற சந்தேகம் எழுந்தது.

வாகன சோதனை
ஆனால் நகைக் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் செருப்பு மாடலும், கால் கலரும் வடமாநிலத்தவர்கள் அல்ல, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸாருக்கு முதல் துப்பு கிடைத்தது. இதனிடையே திருவாரூரில் எஸ்ஐ நேரு தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

சுரேஷ் தப்பிஓட்டம்
இதில் மணிகண்டன், சுரேஷ் ஆகியோரை போலீஸார் மடக்கினர். கையில் விலை உயர்ந்த பெட்டிகள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது சுரேஷ் தப்பிவிட்டார். மணிகண்டன் மட்டும் சிக்கினார்.

தங்க நகைகள்
இதைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி சுரேஷின் தாய் கனகவல்லியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நாலரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

ரவுண்ட்
இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் முருகன் என்று கூறப்படுகிறது. இவர் ஓட்டை போடுவதிலும் உடைக்க முடியாத லாக்கர்களை உடைப்பதிலும் கில்லாடியாம். இவருக்கென வீடு,வாசல் இல்லை. எப்போதும் ஏதாவது வாகனத்திலேயே ரவுண்ட் அடித்து கொண்டிருப்பாராம்.

3 பேர் கைது
இவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளியை திருவாரூரில் போலீஸார் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications