அமமுக அணில்..2024ல் சட்டசபைத் தேர்தல் .. டிடிவி தினகரன் சொல்லும் ஆருடம்..பலிக்குமா?
திருவாரூர்:2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆருடம் கூறியுள்ளார். பிரதமரை தேர்வு செய்வதில் அமமுக அணில் போல செயல்படும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுகதான் நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அசைக்க முடியாத அளவிற்கு நல்லாட்சியைத் தருவோம் என்றும் கூறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறும் என்று பாஜகவினர் கடந்த சில ஆண்டுகாலமாக கூறிவருகின்றனர். அது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் டிடிவி தினகரனோ கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் வரும் பொதுத்தேர்தலுடன் தமிழக சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் என்று கூறி வருகிறார்.
மேற்க உங்களது..கிழக்க எங்களது! வந்ததே 3 பேரு..மாவட்டத்தை பிரித்து கொடுத்த ஓபிஎஸ்! கடுப்பான ர.ர.க்கள்
ராவணன் குடும்பம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ராதாநரசிம்மபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் மறைந்த ராவணன் குடும்பத்தினரை சந்தித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் சிறு அணில்போல் செயல்படும் எனவும் கூறினார்.
அமமுக கூட்டணி
சட்டசபைத் தேர்தலைப் போல அமமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். மேலும் அ.தி.மு.க.வினர் தன்னோடு பேசுவதை அரசியலாகப் பார்க்க வேண்டாம் என்று கூறிய அவர், அரசியல் என்பது வேறு பழக்கவழக்கம் என்பது வேறு. இரண்டையும் குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஓ.பன்னீர் செல்வத்துடன் பேசி பல வருடங்கள் ஆவதாகக் குறிப்பிட்டார்.
வார்த்தை ஜாலம்
திமுக தமிழை வைத்தும், வார்த்தை ஜாலத்தாலும் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தும் கட்சி என்று சாடினார். கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா கையில் மக்கள் ஆட்சியை ஒப்படைத்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல்களால் தற்போது திமுக மீண்டும் ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பொய்யான வாக்குறுதி
கலைஞர் கருணாநிதியைப் போல் பொய்யான வாக்குறுதியை கூறி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறினார். என்.ஐ.ஏ சோதனை நடத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறுவது, ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது தமிழகத்தில் 2024ஆம் ஆண்டே சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றும் டிடிவி தினகரன் ஆருடம் கூறியுள்ளார்.
27 அமாவாசைகள்
2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும், எனவே லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள் தான் உள்ளது என்று சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆருடம் கூறியிருந்தார். திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததில் இருந்தே பலமுறை 2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். ஆளுக்கு ஆள் ஆருடம் கூறும் நிலையில் யாருடைய ஆருடம் பலிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.