சொந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.. திருவாரூர் மண்ணில் விஜய் பேச்சு!
திருவாரூர்: சொந்த மாவட்டமான திருவாரூரை கருவாடாக காயவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். திருவாரூரில் அடிப்படை சாலை வசதி கூட இல்லை என்று கூறியுள்ள விஜய், தமிழ்நாட்டில் குடிசைகள் அதிமுள்ள பகுதியாக திருவாரூர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டார். இன்று மதியம் நாகையில் மக்களை சந்தித்த விஜய், அங்கிருந்து தனது பிரச்சார வாகனத்திலேயே திருவாரூர் மாவட்டத்திற்கு பயணத்தை தொடங்கினார். வழிநெடுகிலும் விஜய்க்கு மக்கள் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் அவரது ரசிகர்கள் ஆரத்தி எடுத்தும், தவெக சால்வையை அணிவித்தும் வரவேற்றனர். இதன்பின் தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் பச்சைத் துண்டு அணிந்து பிரச்சார வாகனத்திற்கு மேல் வந்தார். அதன்பின் விஜய் பேசுகையில், திருவாரூர் என்றதும் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க... இந்த மண்ணோட அடையாளம் ஆச்சே..
திருவாரூரில் ஓடாமல் இருந்த தேரினை ஓட வைத்தது நாங்கள் என்று மார்தட்டி கொள்வார்கள்.. ஆனால் இன்று அவரின் மகன் தமிழ்நாடு என்கிற தேரினை ஓடவிடாமல் நான்கு திசைகளிலும் முட்டுக் கட்டை போடுகிறார்.. திருவாரூர் மாவட்டம் தான் அவங்களுடைய சொந்த மாவட்டம் என பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாக காய்கிறது. அதனை கண்டுகொள்ளவில்லை.
தந்தை பெயரில் பேனா சிலை வைக்கிறீர்கள்.. உங்கள் தந்தையின் பெயரை பல்வேறு திட்டங்களுக்கும் வைக்கிறீர்கள்.. ஆனால் சொந்த மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லை.. நாகை மாவட்டத்தை போலவே திருவாரூர் மாவட்டத்திலும் அதிகளவிலான குடிசைகள் இருக்கின்றன.
தவெக ஆட்சியில் அடிப்படை வசதிகளில் எந்த சமரசமும் இருக்காது. குடும்ப ஆட்சி இல்லாத, ஊழல் இல்லாத தமிழ்நாடு என்பதே இலக்கு.. எங்கு பார்த்தாலும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்கிறார்கள்.. அப்படியா என்று அங்கிருந்தவர்களிடம் விஜய் கேட்க, அதற்கு தொண்டர்கள் இல்லை.. இல்லை.. இல்லை என்று பதில் அளித்தனர்.
இதன்பின் பச்சைத் துண்டை நெற்றியில் கட்டிக் கொண்டு பிரச்சார வாகனத்தின் அனைத்து திசைகளுக்கும் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூரில் விஜய் நின்று கடுமையாக விமர்சித்திருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications