வைகுண்ட ஏகாதசி: திருமலை திருப்பதியில் தரிசனத்திற்காக வந்த 3 வயது குழந்தை கீழே விழுந்து பலி
திருப்பதி: திருமலை திருப்பதியில் இலவச தரிசனத்திற்காக வராண்டாவில் காத்திருந்த போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கடந்த 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரூ 300 தரிசன டிக்கெட், இலவச தரிசனத்திற்கான டோக்கன் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த காலகட்டத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. டோக்கன் பெறாமல் இலவச தரிசனத்திற்கும் அனுமதி கிடையாது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் தனது குடும்பத்தினருடன் வைகுண்ட துவாரம் வழியாக ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு சென்றார்.
இலவச தரிசன டோக்கன் பெற்ற இவர், தலை முடி காணிக்கை செலுத்திவிட்டு முதல் மாடியில் உள்ள வராண்டாவில் தரிசனம் செய்ய காத்திருந்தார்கள். அப்போது அங்கு அவர்களது 3 வயது ஆண் குழந்தை சாத்விக் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தடுப்பு கம்பியின் இடைவெளி வழியாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது.
இதில் படுகாயமடைந்த சாத்விக்கை மீட்டு அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications