திருமலை மலையப்பசுவாமிக்கு புஷ்ப யாகம்..9 டன் மலர்கள்..கண் குளிர தரிசித்த பக்தர்கள்
திருப்பதி: திருமலையில் பூதேவி, ஸ்ரீதேவி மலையப்பசுவாமிக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. 9 டன் மலர்களைக் கொண்டு நடைபெற்ற புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குறைகளை களைவதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. மேலும் பூகம்பம், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியும் புஷ்ப யாகம் செய்யப்படுகிறது.
திருமலை வெங்கடாச்சலபதிக்கு ஆண்டு தோறும் புஷ்பயாகம் நடைபெறுவது தொன்றுதொட்டு நடைபெற்ற வருகிறது. மொகலாயர்கள் ஆட்சி செய்து வந்த 15ஆம் நூற்றாண்டு வரை இது எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற்று வந்தது. பின்னர், காலப்போக்கில் அது கைவிடப்பட்டது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து பின்பு, திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் வேதாந்த ஜெகந்நாதாச்சாரியலு 1980ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் திருமலை ஏழுமலையானுக்கு புஷ்பயாகத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்.

புஷ்ப யாகம்
தெலுங்கு கார்த்திகை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதன்படி திருமலையில் நேற்று புஷ்ப யாகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. அன்று முதல் வழக்கம் போல், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் வரும் கார்த்திகை மாத ஸ்ராவன நட்சத்திர தினத்தன்று, புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் நேற்றைய தினம் புஷ்ப யாகம் நடைபெற்றது.

9 டன் மலர்கள்
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் கல்யாண உற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, திருமலையில் உள்ள தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் இருந்து ரோஜா, முல்லை, மல்லி, சாமந்தி, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அல்லி, சம்பங்கி, மனோரஞ்சிதம் போன்ற மலர்களும் துளசி, தவனம், மருவம், வில்வம் போன்ற புனித இலைகளும் கொண்ட கூடைகளை தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தோட்டக்கலை துறை அதிகாரி நிவாசுலு மற்றும் அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து உற்சவர்களுக்கு இந்த 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இலவச தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. டைம் ஸ்லாட் முறை அமுல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதி அடையாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் அதிக அளவில் டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற பக்தர்கள் குவிந்ததால் அவர்களுடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் டைம் ஸ்லாட் முறை ரத்து செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

குவியும் பக்தர்கள்
இதன் காரணமாக தற்போது தினமும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருவதால் சுமார் 48 மணி நேரம் 5 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்துவது என முடிவு செய்தனர். அதை தொடர்ந்து இன்று முதல் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. திங்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரம் பக்தர்களும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டைம் ஸ்லாட் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச தரிசன டைம் ஸ்லாட்
திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டைம் ஸ்லாட் முறையில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ் சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் ஆகிய 3 இடங்களில் தலா 10 என 30 கவுண்டர்கள் திறக்கப்பட்டது. தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் பெறுவதற்காக நள்ளிரவு முதலே கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவம்பர் மாத விழாக்கள்
1ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற்றது. வேதாந்த தேசிகர் குல சாத்துமுறை, 4ஆம் தேதி சதுர் மாஸ்ய விரதம், 5ஆம் தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், 7ஆம் தேதி கார்த்திகை பூர்ணிமா, 8ஆம் தேதி சந்திர கிரகணம், 20ஆம் தேதி மாதத்ரய ஏகாதசி, 21-ந்தேதி தன்வந்திரி ஜெயந்தி, 28ஆம் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் பஞ்சமி தீர்த்தம் உற்சவத்தையொட்டி பத்மாவதி தாயாருக்கு திருமலையில் இருந்து பட்டு வஸ்திரம், ஆபரணங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications