ஸ்கெட்ச் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மட்டுமில்லை.. பாஜகவுக்கு! லட்டுவை வைத்து நாயுடு ஆடும் அரசியல் ஆட்டம்
திருப்பதி: "திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம்" என்ற விவகாரத்தை முன்வைத்து ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எனும் முதுபெரும் அரசியல் தலைவர் நகர்த்தி வரும் அரசியல் நகர்வுகள் என்ன தெரியுமா?
- முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைப்பது. ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்கிற பழைய விமர்சனத்துடன் இந்துக்களின் புனிதத் தலமான ஏழுமையான் கோவில் லட்டுவின் விலங்குகளின் கொழுப்பை கலப்படம் செய்து புனிதத்தை கெடுத்தவர் என்கிற பழியையும் சுமக்கப் போகிறார். திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் பக்கம் இனி ஜெகன் மோகன் ரெட்டி நெருங்கவே முடியாத அளவுக்கு 'இரும்பு கேட்' போட்டு வைத்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.

- ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மட்டுமல்ல.. 'இந்துக்களின்' வாக்குகளையே 'மலைபோல' நம்பி ஆந்திராவிலும் ஆடிப் பார்க்கலாம் என இலவு காத்திருக்கும் தமது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும் சேர்த்து ஒரு சேர செக் வைத்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. இந்துக்களின் ஏகபோக பாதுகாவலர் பாஜக என்ற இமேஜை லட்டு விவகாரம் மூலம் தன்வயமாக்கிக் கொண்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு.
- இதில் இன்னொரு நுட்பமான அரசியலையும் சந்திரபாபு உருவாக்கி வைத்திருக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டியைப் பொறுத்தவரை பாஜகவை பகிரங்கமாக எதிர்க்காதவர்; பாஜகவுடன் எப்போதும் திரைமறைவு இணக்கத்தைக் காட்டுகிறவர். பாஜகவுக்கும் நாயுடு இல்லாவிட்டால் ஜெகன் மோகன் ரெட்டி என்கிற இரட்டை குதிரை சவாரி எப்போதும் ஆந்திராவில் உண்டு. ஆனால் தற்போது ஏழுமலையான் கோவில் லட்டு விவகாரத்தை முன்வைத்து இனி ஜெகன் மோகன் ரெட்டி பக்கம், பாஜக எட்டிக் கூட பார்க்கவிடாமல் கட்டிப் போட்டுவிட்டார் நாயுடு என்கின்றனர் சீனியர் பாஜக தலைவர்கள்.
- சந்திரபாபு நாயுடுவுக்குதான் ஆட்டம் கை வருமா? சினிமா ஸ்டார் எனக்கு வராதா? என்கிற பாணியில் அவரது கூட்டணி கட்சித் தலைவரான, துணை முதல்வர் பவண் கல்யாணும் சலங்கை கட்டி ஆடுகிறார். சந்திரபாபு நாயுடு, பாஜகவைவிட அதீதமான உணர்ச்சிகளைக் கொட்டுகிறார். சனாதன தர்மத்தைப் பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்; அத்தனை கோவில்களையும் இந்த வாரியத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் குரல் கொடுக்கிறார்.. அத்துடன் ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க- பாவமன்னிப்பு கேட்க 11 நாள் தவமிருப்பதாகவும் அதிரடி காட்டி வருகிறார்.
- பவன் கல்யாணின் இந்த உணர்வுப்பூர்வமான பேட்டிகள், அறிக்கைகள் அனைத்தும் சந்திரபாபு நாயுடுவின் 'இந்துக்களை' ஒருங்கிணைக்கும் வியூகத்துக்கு 'செக்' வைக்கக் கூடியதாகவே பார்க்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மட்டும்தான் இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பாரா? என் பங்குக்கு அவரை விட அதீதமாகவே செய்து காட்ட முடியும்.. என்கிற அரசியல் லாபத்தை அடையும் போட்டியின் வெளிப்பாடாகவே பவண் கல்யாணின் ஆத்திரம், உணர்ச்சி, ஆவேசப் பேச்சுகள் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கின்றன.
- அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, அதனைப் பாராட்டியதுடன் பாஜகவின் 'இந்துத்துவா' முகத்துடன் 'இந்து' அடையாளத்தை ஒருங்கிணைக்கும் பாணியில் முழு வீச்சில் செயல்பட்டவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். கடந்த காலங்களில் இப்படி எல்லாம் நிதிஷ் பேசிப் பார்க்காத பலரும், அடடே! பாஜகவுக்கு போட்டியாக கூட்டணியில் இருந்து கொண்டே, இந்துக்களின் வாக்குகளை வளைத்துப் போடுகிற அஜெண்டாவை கையிலெடுக்கிறாரே நிதிஷ்குமார் என ஆச்சரியப்படவைத்தது.
- தற்போது நிதிஷ் பாணியில்.. அதாவது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தாங்கி நிற்கும் இரு பெரும் தூண்களான சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் பாஜகவுக்கே தண்ணி காட்டும் வகையில் பாஜகவின் வாக்கு வங்கி என நம்புகிற 'இந்துக்கள்' ஓட்டுகளை குறி வைத்து கபடியாடுவது நிச்சயம் பாஜகவுக்குதான் பெரும் நெருக்கடியாகப் போகிறது என புலம்புவது பாஜக தலைவர்கள்தான்!












Click it and Unblock the Notifications