21 ஆண்டுகளுக்கு முன் நக்சல்கள் கொலை முயற்சி-திருப்பதியில் கண்கலங்கி நினைவுகூர்ந்த சந்திரபாபு நாயுடு!
திருப்பதி: 21 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட்டுகள் தம்மை திருப்பதியில் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்து கொல்ல முயன்ற சம்பவத்தை கலங்கிய கண்களுடன் நேற்று திருப்பதி செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று 4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு நாயுடு. முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிவில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார் சந்திரபாபு நாயுடு. இதற்காக நேற்று முன் தினம் இரவே திருமலை வந்து குடும்பத்துடன் தங்கினார் சந்திரபாபு நாயுடு. அதிகாலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக உருமாறும். இதில் தெலுங்கு பேசும் மக்கள் முதல் இடத்தில் நம்பர் ஒன்னாக இருக்க எங்களுக்கு பலத்தை தா ஆண்டவா என ஏழுமலையானிடம் பிரார்த்தித்தேன்.
திருப்பதி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவன். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததுமே திருப்பதி ஏழுமலையாத்தான் வணங்குவேன். எனக்கு குல தெய்வமே ஏழுமலையான்தான். இளம் பிராயத்தில் நடந்து செல்லும் ஒவ்வொரு பொழுதும் ஏழுமலையானைத்தான் தரிசனம் செய்வேன்.
இதே திருப்பதி மலைப்பாதையில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் என் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது (நக்சலைட்டுகள்- மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்). அதையும் எதிர்கொண்டேன். அதேபோல கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனையும் எதிர்கொண்டேன். இத்தனை சவால்களையும் நான் தைரியமாக எதிர்கொண்டு முறியடிக்க எனக்கு பலமாக இருந்ததும் இந்த ஏழுமலையான்தான்.
ஒவ்வொரு இந்துவும் தமது வாழ்நாளில் தரிசனம் செய்தாக வேண்டிய திருத்தலமாக திருப்பதியை மாற்றுவேன். இந்த திருமலையின் புனிதம் முழுமையாகக் காப்பாற்றப்படும். இத்திருமலையில் கோவிந்தனின் திருநாமம் மட்டும்தான் ஒலிக்கும். நான் முன்னெடுத்து வரும் இலக்குகளை அடைய ஏழுமலையான் எனக்கு போதுமான வலிமையைத் தருவார் என நம்பிக்கை கொள்கிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
திருப்பதியைத் தொடர்ந்து திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசனம் செய்தார் சந்திரபாபு நாயுடு. இதன் பின்னரே ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்று கோப்புகளில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.












Click it and Unblock the Notifications