ஏழுமலையானை தரிசித்த எடப்பாடி பழனிச்சாமி.. அதிகாலையில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை.. என்ன விஷேசம்
திருப்பதி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவையில் பங்கேற்று மிகப்பெரிய வேண்டுதலை வைத்துள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ஏழுமலையானிடம் எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய கோரிக்கையை வைத்து விட்டு வந்துள்ளாராம்.
திருப்பதி: திருமலை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சாதாரண பக்தர்கள் முதல் உலக பணக்காரர்கள் வரை அனைவருமே மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

அரசியல்வாதிகள் வேண்டுதல்: இந்திய அரசியல்வாதிகள் திரைப்பட நடிகர்களின் பேவரைட் கடவுளாக இருக்கிறார் திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான். பாதயாத்திரையாக வந்து படத்தின் வெற்றிக்காக திரை உலக பிரபலங்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்களின் குடும்பத்தில் வசிப்பவர்கள் கூட ஏழுமலையானை ஆண்டுக்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்ய தவறுவதில்லை.
எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதிக்கு வருகை தருவார். தற்போது லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருமலைக்கு வந்தார். நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார்.
வராஹ சாமியிடம் வேண்டுதல்: ஏழுமலையானை தரிசனம் செய்யும் முன்பாக வராஹ சாமியை வழிபடுவது சிறப்பு. அதன்படி நேற்று இரவு வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசித்தார். பிறகு மாட வீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.
அஷ்டதல பாத பத்மாராதனை சேவை: இன்று காலை கோவிலுக்கு சென்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர் பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அஷ்டதல பாத பத்மாராதனை சேவை என்பது செவ்வாய்கிழமை மட்டுமே இந்த தரிசன சேவை நடைபெறும். அரை மணி நேரம் நிதானமாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இதற்கு ஒரு நபருக்கு 1250 ரூபாய் கட்டணமாகும்.
தங்க தாமரை மலர் அர்ச்சனை: அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் இந்த ஆர்ஜித சேவை சிறப்பு வாய்ந்தது. திருமலையில் 1984ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு மலர் என வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.
செவ்வாய்கிழமை மட்டுமே: திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குரிய பூஜையில் 108 தங்கத் தாமரைப் பூக்களை நன்கொடையாக வழங்கியவர் ஒரு இஸ்லாமிய பக்தர். அந்த பக்தர் வைத்த வேண்டுகோளின்படியே செவ்வாய்கிழமைதோறும் 'அஷ்டதள பாதாள சேவை இன்றளவும் நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை செய்து தேர்தல் வெற்றிக்காகவும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க ஏழுமலையானை வேண்டிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
தங்கத்தாமரை மலர்கள்: புராண இதிகாச காலத்தில் ஆதிசேஷன் கபில மகரிஷியிடம் இந்த அஷ்டதள பாத பூஜையைப் பற்றிக் கூறி இருக்கிறார் என்று கூறுகிறது வெங்கடேஸ்வர மகாத்மியம். பிரம்ம தேவன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்களுடன் மற்றும் தேவதா கணங்களுடன் தேவகங்கையில் பூக்கும் தங்கத்தாமரைப் பூக்களைக்கொண்டு வெங்கடேசப் பெருமாளுக்கு இந்தப் பூஜையை செய்தாராம். இதில் மனம் மகிழ்ந்த வெங்கடேசப் பெருமாள், பிரம்ம தேவனுக்கு லோக கல்யாண வரத்தை வழங்கினார்.
சகல செல்வங்களும் கிடைக்கும்: இப்போது இந்த 108 நாமவளி பூஜையை நாம் செய்தால், 16 வகையான ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வில்வத்துக்கும் நிர்மால்ய தோஷம் கிடையாது. அதே போல தங்கத்துக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ததை மீண்டும் பயன்படுத்தலாம். எனவேதான் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஏழுமலையானுக்கு அஷ்டதள பாதாள ஆர்ஜித சேவை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications